Skip to main content

பெண் கொடுக்க மறுத்ததால் பெண்ணின் தந்தையை கொலை செய்த கும்பல்!

Published on 13/07/2021 | Edited on 13/07/2021
father refused a person to marry his daughter, gang attacked

 

அரியலூர் மாவட்டம் கீழபழுர் அருகே உள்ளது வைப்பூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சுலோச்சனா, இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது மகளை அதே ஊரைச் சேர்ந்த நாகராஜ் குள்ளாயி தம்பதியின் மகன் அஜீத்குமார்(20) என்பவர் திருமணம் செய்து கொள்வதற்கு விரும்பியுள்ளார். இந்த தகவல் கண்ணனுக்கு தெரியவந்தது. தன் மகளை அஜித்குமாருக்கு திருமணம் செய்து கொடுப்பதற்கு கண்ணனுக்கு விருப்பம் இல்லை. அதனால் சில மாதங்களுக்கு முன்பு வெளியூரில் மாப்பிள்ளை பார்த்து தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் கண்ணன்.

 

இதனால் அஜித் குமார் மற்றும் அவரது சகோதரர்கள் விஜயகுமார், முத்துக்குமார், அருண்குமார் ஆகியோர் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை அவ்வப்போது மிரட்டி வந்துள்ளனர். மேலும், அவ்வப்போது இரவு நேரங்களில் கண்ணன் வீட்டுக்கு நேரடியாக வந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் தங்கள் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று பயந்த கண்ணன் அவரது மனைவி சுலோச்சனா ஆகிய இருவரும் தூத்தூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரிடம் நேரில் சென்று புகார் அளித்துள்ளார். மேலும் "அஜீத்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். அவர் வீட்டுக்கே வந்து தவறாகப் பேசுகிறார்கள்.

 

அவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் எனவே அவர்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது எனவே எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்" எனப் புகார் மனு அளித்துள்ளனர். சரி சரி பார்த்துகலாம் போங்க என்று சப்-இன்ஸ்பெக்டர் அலட்சியமாக கண்ணனையும் அவர் மனைவியையும்  அனுப்பிவிட்டார். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு அஜித் குமார் மற்றும் அவரது சகோதரர் கண்ணனிடம் மீண்டும் தகராறு செய்துள்ளனர்.  உடனே தொலைபேசி மூலம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரிடம், "தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் அஜீத்குமார் சகோதரர்களால் ஆபத்து உள்ளது நேரடியாகவே வீட்டுக்கு வந்து மிரட்டுகிறார் எனவே பாதுகாப்பு கொடுங்கள்" என்று கண்ணன் மீண்டும் கேட்டுள்ளார்.

 

அதையும் ராஜ்குமார் அலட்சியம் செய்துள்ளார். இந்த நிலையில் 11ஆம் தேதி காலை தங்கள் ஊருக்கு அருகில் மீன் விற்பனை செய்யும் இடத்திற்கு மீன் வாங்குவதற்காக தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் கண்ணன் சென்றுள்ளார். அப்போது வழியில் மறைந்திருந்த அஜீத்குமார் கண்ணனை வழி மறித்து கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதைக்கண்டு அக்கம்பக்கத்தினர் மிரண்டு ஓடினார்கள். ரத்த வெள்ளத்தில் விழுந்த கண்ணனை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். செல்லும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக இறந்துள்ளார். தூத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரின் அலட்சியப் போக்கினால் ஒரு உயிர் அநியாயமாகப் பறிபோனது கண்டு கோபமடைந்த கண்ணனின் உறவினர்கள் கண்ணனின் சடலத்தை சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர்.

 

தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டதோடு, "காவலர் அலட்சியமாக இருந்ததன் காரணமாக இப்போது கண்ணனின் உயிர் பறிபோயுள்ளது. அப்படிப்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கோரிக்கை வைத்தனர். விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாக்குறுதி கொடுத்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. கண்ணனின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்பு அடக்கம் செய்யப்பட்டது. பெண் தர மறுத்ததற்காகக் கொலை செய்த அஜித் குமார் மற்றும் அவரது சகோதரர் அருண்குமார், முத்துக்குமார், விஜயகுமார் உட்பட 6 பேர்களைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளது தூத்தூர் காவல்துறை. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.