
திருப்பத்தூர் ,வேலூர் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் ஒற்றைக் கொம்பன் என்று சொல்லக்கூடிய ஒற்றை தந்தம் கொண்ட காட்டு யானை முகாமிட்டு வருகிறது. வனப்பகுதிகளிலும் விவசாய நிலங்களிலும் சில ஆண்டுகளாக சுற்றி வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் ஒடுகத்துர் காட்டு பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த அந்த காட்டு யானை திருப்பத்தூர், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள தீர்த்தம் வனப்பகுதியை ஒட்டியுள்ள காமந்தட்டு வழியாக சென்று காவலூர் மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக முகாமிதுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த ஆலங்காயம் வனசரகர் சேகர், காவலூர் வனவர் ஆனந்த குமார் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் அந்த ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
அந்த யானை வசந்த புறம், நசக்குட்டை ,கிருஷ்ணாபுரம்,உப்பு பாறை விவசாய நிலங்கள் வழியாக சென்று தற்போது அருகே உள்ள காப்பு காட்டில் முகாமிட்டுள்ளது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவு விவசாய நிலங்கள் உள்ளதால் அந்த காட்டு யானை விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளதால் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.மேலும் அந்த காட்டு யானை விவசாய நிலைகளில் நுழையாமல் இருக்க அந்த காட்டு யானையை காட்டிற்குள் விரட்ட வேண்டும் என்று வனத்துறைக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.