
கடலூர், திருப்பாதிரிப் புலியூரைச் சேர்ந்த பக்கிரிசாமி என்பவரது மகன் சரவணன்(35). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கும், வடலூர் ஆபத்தாரனபுரத்தை சேர்ந்தவரும், நெய்வேலியில் வன அலுவலராக பணிபுரிபவருமான கவி(29, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண்ணின் பெற்றோர் சரவணனுக்கு சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர். இருப்பினும் திருமணத்திற்குப் பிறகும் பெற்றோர் வீட்டில் இருந்து 25 பவுன் நகையும், ரூபாய் 5 லட்சமும் கூடுதலாக வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு கவியை, சரவணன் குடும்பத்தினர் துன்புறுத்தி கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதற்கிடையில் கவி கர்ப்பமானார். 5 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு சரவணன் குடும்பத்தினர் கஷாயம் போன்ற திரவத்தை கட்டாயப்படுத்தி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் அவரது கர்ப்பம் கலைந்தது.
இது குறித்து கவி திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சரவணன், அவரது தாயார் மல்லிகா(55) மற்றும் அவரின் இரண்டு சகோதரிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சரவணன், மல்லிகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவரின் இரண்டு சகோதரிகளை போலீசார் தேடி வருகின்றனர்.