Skip to main content

பணமோசடி வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரிய செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி! 

Published on 27/08/2020 | Edited on 27/08/2020

 

dmk mla senthil balaji chennai special court

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

 

கடந்த 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த தற்போதைய தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் பெற்று மோசடி  செய்ததாக,  மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். 

 

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திவரும் மத்திய  குற்றப்பிரிவு   போலீசார், சென்னை, கரூர், திருவண்ணாமலை, கும்பகோணம் என செந்தில் பாலாஜிக்கு சொந்தமான அவரது வீடு, அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.

dmk mla senthil balaji chennai special court

சோதனையின்போது மோசடி நடைபெற்ற காலக்கட்டத்தில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள், தங்க நகைகளின் ரசீதுகள், ஆபரணங்கள், வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல்வேறு நபர்களிடம் பெற்ற சுய விபரக் குறிப்புகள், நேர்காணலுக்கான அழைப்பு கடிதங்கள், அவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பெற்ற பணம் குறித்த விபரங்களின் பட்டியல் கைப்பற்றப்பட்டதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், செந்தில் பாலாஜி  சட்டமன்ற உறுப்பினர் என்பதால், எம்.பி- எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.

 

இந்த நிலையில், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில்பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 

மனுவை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரமேஷ், வழக்கில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க மறுத்து,  செந்தில் பாலாஜியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்