சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது' என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் நேற்று (05/02/2025) வெளியிட்டிருந்த 'எக்ஸ்' பதிவில், 'மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்தோ இந்த ஸ்டாலின் மாடல் அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா?
"போலீஸுக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம்" என்று கள்ளச்சாராயம் விற்பவன் தைரியமாக சொல்லும் அளவிற்கு கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப் படுத்தியுள்ளதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கப்பட வேண்டும். போதாக்குறைக்கு, "திமுக கட்சிக்காரன்" எனும் அடையாளம் வேறு. திமுக என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா? அவர்கள் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா?
தமிழ்நாட்டில் நீங்கள் ஆட்சிக்கு வந்தது, உங்கள் கட்சி அடையாளத்தை லைசன்சாக பயன்படுத்தி, சகல குற்றங்களையும் திமுகவினர் செய்வதற்கு தானா முதல்வரே? உடனடியாக இந்த கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்வதோடு, எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி அனைவர் மீதும் சட்ட நடவடிக்கையை உறுதிசெய்ய வேண்டும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்துள்ளார். இது குறித்து அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'பாம் வைப்பதும் நானே எடுப்பதும் நானே என்ற கணக்கில் அவசர அவசரமாக எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்கிறார். தவறான தகவலை அதிமுகவினர் பரப்புவதும் பின்னர் குற்றவாளி அதிமுகதான் என்ற உண்மை வெளியானவுடன் அமைதி காப்பதும் ஒரு பேர்ட்டன். சேலம் ஆத்தூரில் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டது திமுகவினர் என எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டு இருந்தார். ஆனால் கள்ளச்சாராயம் பெற்றதாக கைது செய்யப்பட்ட ரவி என்பவருக்கு கள்ளச்சாராயம் சப்ளை செய்தது அதிமுக பிரமுகர் ராஜா என தெரிய வந்துள்ளது' என பதிலளித்துள்ளார்.