ஆசிரியர், மாணவி ஒருவரை சக மாணவர்கள் முன்னிலையில் தகாத வார்த்தையால் திட்டியதை அனைத்து மாணவர்களும் கேட்டதால் அரசு செய்முறை தேர்வில் தட்டிக்கேட்ட அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளதாகப் பள்ளியைப் பெற்றோர்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்துள்ள லால்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் உள்பட 563 பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் 12- ம் வகுப்பில் இயற்பியல் பிரிவில் படித்து வரும் மாணவி ஒருவரை இயற்பியல் ஆசிரியர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு மாணவர்கள் மத்தியில் தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக அந்த வகுப்பில் பயின்ற 40- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அப்போது ஆசிரியரிடம் கேட்டுள்ளனர். இந்தநிலையில் 12- ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு நடைபெற்று வந்தது. அந்தத் தேர்வில் குறிப்பிட்ட அந்த மாணவி உள்பட 48 பேருக்கு மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர். அதைத் தொடர்ந்து மாணவர்களுடன் பெற்றோரும் செவ்வாய்க் கிழமை அன்று பள்ளியின் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பள்ளியின் உள்ளே சென்று சம்மந்தப்பட்ட ஆசிரியரிடம் இது சம்பந்தமாக கேள்விகள் எழுப்பினார்கள்.
தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் இளவரசி மற்றும் காவலர்கள் விரைந்து சென்று சம்மந்தப்பட்ட ஆசிரியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் ஆசிரியர் மீது புகார் கொடுங்கள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.