Skip to main content

இந்திய வரலாற்றைத் திருத்தாதே! மனு வாதத்தை திணிக்காதே!-சி.பி.ஐ.மறியல் நிகழ்வு!

Published on 13/10/2020 | Edited on 16/10/2020

 

இன்றைய கரோனா பாதிப்பு நெருக்கடியான சூழலில் மத்தியில் ஆளும் பா.ஜ.கட்சி மக்களைப் பாதுகாக்க தவறிவிட்டு இந்திய மக்களை மேலும் நெருக்கடி நோக்கி தள்ளுகிற மக்கள் விரோத சட்டங்களை பலமான எதிர்க்கட்சிகள் அற்ற நிலையில் தந்திரமாகவும்  பலவந்தமாகவும்  திணிக்கிறது.

விவசாயிகள்,தொழிலாளர்கள் ஏழை எளிய மக்களின் நலன்களை ‘’அடித்துப்பறிக்கிற’’ மத்திய அரசின் கொடுமையான வேளாண்மை திருத்தச் சட்டங்கள்.பல்லாண்டு காலமாக பாதுகாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் கொடுமை. போராடிப் பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்கள் பறிப்பு.தகுதி இருந்தும் தமிழ்நாட்டு மாணவர்களை தற்கொலைக்கு தள்ளும் ‘’நீட்’’ தேர்வு முறையை   திரும்பப்பெற வலியுறுத்தி. மாநிலஅரசின் உரிமைகள் பறிப்பு. நரித்தந்திர அரசியல் அடக்குமுறை. தமிழக அடிமை எடப்பாடி அரசு பதவிக்காக துணைபோகும் அவலங்கள். ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கட்டிடத்தொழிலாளர்கள், ஏழை எளிய மக்களின் ‘’கரோனாகால’’  வருமான இழப்புக்கு ஈடுகட்டும் விதமாக மாதம் 7500ரூ. இழப்பீடு வழங்கக் கோரி, மத்தியமாநில அரசுகளின் காதுகளில் விழும்படி ‘’போர்  சங்கநாத’’ ஒலி எழுப்பும் விதமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகம் முழுக்க மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக தலைநகர் சென்னையில் அக்டோபர் 12 திங்கள் காலை 11.00 மணியளவில்  கிண்டி தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் துவக்கி வைக்க சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.ஏழுமலை,மாதர்சங்க மாவட்டக் குழு உறுப்பினர் சுசீலா,மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் வி.கே.கோபாலன். திருவான்மியூர், தரமணி ஆட்டோ, ஷேர்ஆட்டோ தொழிற்சங்கவாதிகள் பலரோடு, சீனிவாசன், பத்மநாபன்,சி.சு.கோவிந்தன்,டீகாராமன்,போன்றோர் சேர்ந்து உரத்த குரலில் மத்திய மாநில அரசை நோக்கி கேட்ட அறிவுபூர்வமான கோபமான கேள்விகள் செவிடன் காதில் ஊதிய சங்காகி விடாமல் இருக்க வேண்டும். ஆக்க பூர்வமான கேள்விகள் கேட்பவர்கள் மீது மத்திய அரசு ‘’அர்பன் நக்ஸல் முத்திரை’’ குத்தி ஜெயிலில் பிடித்துதான் போடும் என்ற பயம் இன்றி நடந்த எழுச்சிமிக்க மறியல் போரில் கைக்குழந்தைகளுடன் பெண்களும் ஆண்களும் மாணவ மாணவிகள், ஆட்டோ ஷேர் ஆட்டோ  தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், சென்னை புறநகரை  ஒட்டியுள்ள விவசாயப் பெருங்குடி மக்களும் பல நூற்றுக்கணக்கில் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

நம் கேள்விகளுக்கு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசனின்  ‘’நறுக் சுருக்’’ பதில்கள் ,

நக்கீரன் ; விவசாயிகளுக்கான மோடி அரசின் திட்டங்கள் பற்றி தங்கள் பதில் என்ன?

இரா.முத்தரசன்: ‘’சர்க்கரை’’னு பேப்பர்ல எழுதிட்டு நாக்கால நக்குனா இனிக்குமா! இனிக்காது. நரேந்திரமோடி அரசின் திட்டங்கள் போலியானவை. தந்திரமானவை.  

கேள்வி: கடம்பூர் ராஜு திமுக கூட்டணி உடைந்து போகும் என்கிறாரே?

பதில்: அது அவர் ஆசை.பகல் கனவு. பேராசைகளின் வெளிப்பாடு. திமுக கூட்டணி கட்சிகளுக்குள் ஒரு அருமையான புரிதல் உள்ளது.

கேள்வி: திமுக கூட்டணியில் சில கட்சிகள் தனித் தனி சின்னத்தில் நிற்கும் என்கிறார்கள்! கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை என்ன?

பதில்: கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பற்றி திமுக தலைமை நன்கு புரிந்து வைத்துள்ளது. எங்கள் சின்னம் பற்றி அவர்கள் சிறிதளவு கூட யோசிக்க மாட்டார்கள். எங்கள் கட்சி தேசியக் கட்சி. நாங்கள் கதிர் அரிவாள் சின்னத்தில்தான் நிற்போம்.சி.பி.எம்.அரிவாள் சுத்தியல் சின்னத்தில்தான் நிற்கும். அது திமுக தலைமைக்கு நன்கு தெரியும். அவர்களுக்கு அந்த புரிதல் மிக தெளிவாகவே உள்ளது.

கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளின்  ‘’கைக்கூலி தரகர்கள்’’ கிளப்பி விடும் பூச்சாண்டி வேலைகளில் இது ஒன்று. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். பி.ஜே.பிக்கும் ,கொள்ளைக்கார அ.தி.மு.க.வுக்கும் வாக்களிப்பதில்லை என்று மக்கள் உறுதியான முடிவெடுத்து விட்டார்கள். மக்கள் மன்றத்தில் அவர்கள் தோற்பது உறுதியாகி விட்டது.

குறிப்பு:மறியல் பற்றி திருவான்மியூர் காவல்துறை உதவி ஆணையர் உயர்திரு.பொ.க.ரவி அவர்களிடம் நக்கீரன் சார்பாக அணுகிய போது ‘’பொதுமக்களுக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் கட்டுப்பாடாக மறியல் நடந்தாலும் கொரோனா காலத்தில் பெருங்கூட்டமாக கூடிய காரணத்தால் அனைவரும் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்படலாம்’’ என்பதாக  கூறினார்.


கூட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள்:

''இந்தியாவின் உயிர்நாடி விவசாயம்.விவசாயம்.
பொருளாதார உயிர்நாடி தொழிலாளர் தொழிலாளர்.
விவசாய,தொழிலாளர் நலனுக்கு மத்திய அரசு வேட்டு
திருத்தப்பட்ட சட்டங்களை மத்திய அரசே வாபஸ் வாங்கு.
குறைந்த பட்ச ஆதார விலைக்கு வேட்டு வைக்கும்
சட்டத்துக்கு விவசாயிகள் வேட்டு வைப்போம்.
அதானிக்கும் அம்பானிக்கும் பாதுகாப்பு துறையை விற்காதே.
இந்தியாவின் கோவில்கள் பொதுத் துறையை விற்காதே.
அதானிக்கு விமான நிலையங்களை விற்காதே!
துணை போகாதே!துணை போகாதே!
துப்புக்கெட்ட மோடிக்கு எடப்பாடி அரசே
துணை போகாதே!  
கொரோனா போர்வையில் வருகிற
கொடுமையான சட்டங்களைத் தூக்கியெறிவோம்.
குப்பைக் கூடையில் தூக்கி எறிவோம்.
கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழக அரசை புறக்கணிக்காதே.
இந்திய வரலாற்றைத் திருத்தாதே!
மனு வாதத்தை திணிக்காதே!
பெண்களுக்கு பாதுகாப்பற்ற மோடி அரசை எறிவோம்'' என்ற முழக்கங்கள் வைக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.