Skip to main content

காங்கிரஸ் எம்.பி. மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021
Congress MP Complain to the District Collector

 

ஆரணி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில் சென்னை திருச்சி நான்கு வழிச்சாலையில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன. விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் அந்த விபத்து பகுதிகளில் ஒன்பது மேம்பாலங்கள் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன்படி தற்போது ஆறு மேம்பாலங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. குறிப்பாக எனது நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூட்டேரிப்பட்டு மேம்பாலப் பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. இப்பணிக்காக 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான இடத்தை கையகப் படுத்துவதற்காக மட்டும் மூன்றரைக் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

ஆனால் இதுவரை மேம்பால பணிகள் துவக்கப்படவில்லை. வரும் ஆகஸ்ட் மாதத்திற்க்குள் இப்பணிகள் துவக்கபடாவிட்டால் மக்களை திரட்டி பெரிய அளவில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றும் ஏற்கனவே அதிகாரிகளுக்கு இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். மேலும் திண்டிவனம் நகரின் இடையே 120 கிலோ மீட்டர் தூரம் ரயில் பாதை செயல்படுத்தும் திட்டத்தையும் மத்திய அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது. இந்த திட்டத்தினால் விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என பல்வேறு மாவட்ட மக்கள் போக்குவரத்துக்கு சிரமம் இன்றி சென்றடைவார்கள். மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மின் விளக்குகள் எரிவதில்லை, குடிநீர், தொலைபேசி வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இவைகளுக்கெல்லாம் சேர்த்துதான் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 

Congress MP Complain to the District Collector

 

ஆனால் பராமரிப்பு பணிகள் சுத்தமாக மேற்கொள்ளப்படுவதில்லை. மேலும் திண்டிவனம், திருவண்ணாமலை இடையே 2009 ஆம் புதிய ரயில்வே திட்டம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான பணிகளும் துவங்கப்பட்டு எட்டு ரயில்வே பாலங்கள் கட்டப்பட வேண்டும். அதில் ஆறு பாலங்கள் கட்டும் பணி 38 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் பத்தாண்டுகள் கழித்து 2019ஆம் ஆண்டு இந்தத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட மக்களை பெரிதும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் அடாவடித்தனமாக பணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு சுங்கச்சாவடிகளும் கப்பம் கட்டும் முறை உள்ளது.

 

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் இதுபோன்ற சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். மேற்படி பணிகளை விரைந்து முடித்தால் ஐந்துக்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் பயனடைவார்கள் என்பதை கருத்தில் கொண்டு இது சம்பந்தமான பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் விஷ்ணு பிரசாத் எம்.பி. புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். மேற்படி பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் பரிந்துரை செய்யுமாறு அவரது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அவருடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மாவட்டத் தலைவர் ரமேஷ் மற்றும் காத்தவராயன், குமார், சுப்பிரமணி ஆகியோரும் உடன் இருந்தனர். 

 

 


 

சார்ந்த செய்திகள்