
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 19-ஆம் தேதி ஆருத்ரா தேர்த்திருவிழாவும் 20-ஆம் தேதி தரிசன விழா நடைபெறும் என கோவில் தீட்சிதர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு அதற்கான விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் கரோனா, ஒமிக்ரான் நோய் தொற்று காரணமாக அரசின் உத்தரவுப்படி பொதுமக்கள் அதிகம் கூடுவதை தடுக்கும் விதமாக தேர் மற்றும் தரிசன விழாவில் கூட்டம் கூடுவதற்கு அனுமதி இல்லை என்றும், தேர் மற்றும் தரிசன விழாவை கோவிலுக்கு உள்ளே நடத்திக் கொள்ள சிதம்பரம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 19-ஆம் தேதி தேர்த் திருவிழாவிற்கு அனுமதி அளிக்ககோரி கீழ வீதியில் கோவிலின் வாசலில் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் தேர் திருவிழா நடத்தவும், தரிசன விழாவுக்கு பக்தர்களை கூட்டமாக அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கீழ வீதி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் வகையில் சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் நாகராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ், சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் உள்ளிட்டவர்களிடம் தமிழக அரசின் உத்தரவுப்படி குறைந்த பக்தர்களை கொண்டு முக கவசம் அணிந்து தேர்திருவிழா நடத்துவதற்கு அனுமதி அளிப்பதாக அறிவித்தனர். இதனைக்கேட்ட பக்தர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வரவேற்று கோஷங்களை எழுப்பினார்கள் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.