Skip to main content

மாமல்லபுரம் வழக்கில் ஜன. 2-ல் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால்..?- செங்கல்பட்டு கலெக்டர் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என அறிவுறுத்தல்!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

மாமல்லபுரத்தை அழகுபடுத்திப் பாதுகாக்கக் கோரிய வழக்கில் ஜனவரி 2- ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை ஆஜராகும்படி உத்தரவிட நேரிடுமென சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மாமல்லபுரத்தை நிரந்தரமாக பாதுகாக்கக் கோரி நவம்பர் 1- ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதி கிருபாகரன் கடிதம் எழுதியிருந்தார். 

KANCHEEPURAM MAMALLAPURAM TOURIST PLACE CHENNAI HIGH COURT ORDER


அதில், கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு மற்றும் வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்டவற்றில் லைட்டிங் ஷோ-விற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்; புராதன சின்னங்களை மறைக்கும் வகையில் கட்டிடங்களை  அனுமதிக்கக் கூடாது; குப்பை போடுவதைக் குற்றமாக்கி குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும்; சீன அதிபர் வருகையின் போது அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என பரிந்துரைகளை வழங்கியிருந்தார்.

KANCHEEPURAM MAMALLAPURAM TOURIST PLACE CHENNAI HIGH COURT ORDER

அந்தக் கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து பொது நல வழக்காக விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சரவணன் அடங்கிய அமர்வு, நீதிபதி கிருபாகரன் அளித்த பரிந்துரைகள் தொடர்பான நடவடிக்கைகள், ஒதுக்கப்படவுள்ள நிதி உள்ளிட்ட அனைத்து விவரங்களை புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

KANCHEEPURAM MAMALLAPURAM TOURIST PLACE CHENNAI HIGH COURT ORDER

இந்த வழக்கு  நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் இன்று (12.12.2019) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. அதனை ஏற்று வழக்கை ஜனவரி 2- ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என அறிவுறுத்தியுள்ளனர்.



 

சார்ந்த செய்திகள்