கரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழ்நாடு அரசு தளர்வுகள் அறிவித்துள்ளது. ஆனால் பொதுமக்கள் அவற்றை முறையாக கடைப்பிடிப்பதில்லை. திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் சற்று கட்டுக்குள் உள்ள நிலையில், தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே செல்ல துவங்கியுள்ளனர்.
இதனால் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதுபோன்ற இடங்களில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. ஆனாலும் பலர் முகக்கவசம் அணிந்து வந்தாலும், அவற்றை முறையாக அணிவதில்லை. இதனால் முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் மாநகர காவலர்களும், திருச்சி மாநகராட்சி நிர்வாகமும் தீவிரம் காட்டிவருகிறது.
கடந்த 6 மாதங்களில் திருச்சி மாநகரில் முகக்கவசம் அணியாத 82 ஆயிரத்து 750 பேரிடமிருந்து மாநகர காவல்துறை ஒரு கோடியே 75 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் மாநகர காவல்துறை, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் வாகனங்களில் செல்பவர்களையும் மறித்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக நேற்று (28.10.2021) கே.கே. நகர் சாலை, பெரிய கடை வீதி, என்.எஸ்.பி சாலை என்று பல்வேறு இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.