Skip to main content

’ஏகாதிபத்திய மத்திய அரசு கலங்கிப் போனது’ - தி.மு.க. மகளிர் அணி மாநில நிர்வாகிகள் கூட்ட தீர்மானங்கள்

Published on 23/08/2018 | Edited on 23/08/2018
d

 

23.08.2018, வியாழனன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் 1:

1924 ஜூன் 3 செவ்வாய்க்கிழமை திருக்குவளையில் சூரியன் உதயம்.  2018 ஆகஸ்ட் 7 செவ்வாய்கிழமை சென்னையில் சூரியன் மறைவு. தன்னுடைய 14 வயதில் பொது வாழ்வில் அடியெடுத்து வைத்த நம் தலைவர் கலைஞர் அவர்கள், தன்னுடைய அரசியல் பணியால், சமூகப் பணியால், இலக்கியப் பணியால், கலைப் பணியால், கழகப் பணியால், தமிழ்ப் பணியால், அரசு நிர்வாகப் பணியால் தமிழ்நாட்டுக்கே ஒளி தந்தார். தகத்தகாயமாய் ஒளி வீசிய நம் திராவிடச் சூரியனால் நாட்டில் ஒளி பெற்றோர் ஏராளம் ஏராளம். திராவிட இயக்கத்தின் சிப்பாயாக, பெரியாரின் சீடனாக, அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியாக, தி.மு.க வின் தொண்டனாக தொடங்கிய அவர் வாழ்க்கை, அவருடைய அளப்பரிய பணியால் அவரை கட்சியின் தலைவனாக உயர்த்தியது.

 

ஐம்பது ஆண்டுகள் தொடர்ந்து தி.மு.க வின் தலைவராக அவர் இருந்தது, இதுவரை யாரும் செய்திடாத ஓர் சாதனை. இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ சோதனைகள், வேதனைகள் கட்சிக்கு வந்த போதெல்லாம், அத்தனையையும் தாங்கி, அனைத்தையும் எதிர்கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தை, யாராலும் அசைக்க முடியாத ஒரு எஃகு கோட்டையாக வைத்திருந்தவர்  தலைவர் கலைஞர்.

 

அவசர காலச் சட்டத்தை எதிர்த்து அவர் போர் முரசு கொட்டிய போது, ஏகாதிபத்திய மத்திய அரசு கலங்கிப் போனது.

மிசா சட்டத்தில் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளெல்லாம், தன் மகன் உட்பட கைது செய்யப்பட்டு, காராக்கிரகத்திலே அடைக்கப்பட்ட போது, தனி ஒரு நபராக இருந்து இந்த மாபெரும் இயக்கத்தை கலைஞர் கட்டிக்காப்பாற்றியது கண்டு நாடே வியந்தது.

 

கட்சியின் தலைவராக இருந்த அவர் ஆற்றிய  சிறப்பான பணிகளைப் போலவே நாட்டின் தலைவராக – தமிழகத்தின் முதல்வராக அவர் செய்த சாதனைகள் எண்ணிலடங்கா.

·         இலவச கண்ணொளி வழங்கும் திட்டம்

·         பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம்

·         குடிசைமாற்று வாரியம்

·         ஆதிதிராவிடர்களுக்கு இலவச கான்கிரிட் வீடு

·         பேருந்துகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டது

·         சேலம் உருக்காலை திட்டம்

·         கைரிக்க்ஷா ஒழிப்பு

·         அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்பு திருமண திட்டம்

·         கருணை அடிப்படையில் பணி நியமனம்

·         டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண திட்டம்

·         மாநில அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்

·         பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை

·         மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டம்

·         ஈ.வெ.ரா நாகம்மையார் நினைவு மகளிர் இலவச பட்டபடிப்பு திட்டம்

·         கர்ப்பிணி பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதிஉதவி திட்டம்

·         மாநிலத்தில் முதன்முதலாக மகளிர் சுய உதவிக் குழுக்கள்

·         விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்

·         சென்னையில் டைடல் பூங்கா 

·         உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33%  இட ஒதுக்கீடு

·         பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்

·         உழவர் சந்தைத் திட்டம்

·         தென்குமரியில் 133  அடி அய்யன் திருவள்ளுவர் சிலை

·         பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவில் தினமும் ஒரு முட்டை

·         மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ்

·         1 கிலோ அருசி 1 ருபாய்

·         தமிழ்புத்தாண்டு பொங்கலுக்கு இலவச பொங்கல் பொருட்கள்

·         7,500 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி

·         இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி

·         இலவச எரிவாயு இணைப்புடன் எரிவாயு அடுப்பு

·         நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக விவசாய நிலங்கள்

·         இலவச வீட்டு மனை பட்டாக்கள்

·         காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக அறிவிப்பு

·         செம்மொழி தமிழாய்வு மையம் சென்னையில் அமைப்பு

·         108 ஆம்புலன்ஸ் சேவை

·         கலைஞர் காப்பீட்டு திட்டம்

·         இஸ்லாமிய சமுதாயத்திற்கு 3.5 % தனி உள்ஒதுக்கீடு  

·         அருந்ததியர்  சமுதாயத்திற்கு 3% தனி உள்ஒதுக்கீடு

·         அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்

·         உலகதரத்திலான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்

·         வடசென்னை மீஞ்சுர், நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

·         மெட்ரோ இரயில் திட்டம்

·         மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை திட்டம்

·         டெஸ்மா, எஸ்மா சட்டங்கள் நீக்கம்

·         சமச்சீர் கல்வித் திட்டம்

·         காவல்துறையில் பெண்கள்

·         தமிழ்மொழிக்கு  செம்மொழி அந்தஸ்து

·         சென்னை கிருஷ்ணா குடிநீர் திட்டம்

·         ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச்செயலகம்

·         செம்மொழிப் பூங்கா, தொல்காப்பியப் பூங்கா

·         தமிழகமெங்கும் பிரம்மாண்ட மேம்பாலங்கள்

·         வள்ளுவர் கோட்டம்

·         மே 1 தொழிலாளர் தினத்தன்று விடுமுறை

·         மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் உள்ளிட்டோர் நலன் காக்க நல வாரியம் 

 

தமிழ்ச் சமுதாயம் விழிப்புடன் இருக்க தன் வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்த தலைவர்தான், தன் அண்ணனுக்கு அருகில் விழி மூடி, ஓய்வு கொண்டிருக்கிறார். அவர் வழியில், அவர் விட்டுச் சென்ற பணிகளை தொய்வின்றி தொடர்வோம், ஒற்றுமையோடு கழகத்தைக் காப்போம் என அவர் நினைவு போற்றி, உறுதி எடுப்போம்.

 

தீர்மானம் 2:

திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடிமட்டத் தொண்டராக இருந்து படிப்படியாக அரசியல் பாடம் கற்று, தலைவர் கலைஞர் வைத்த சோதனைகளில் வெற்றி பெற்று, மிசாவில் சிறை சென்று, தியாகியாக சிறை மீண்டு, சென்னை மேயராக உயர்ந்து, துணை முதல்வராக அரசு நிர்வாகத்திலும் பயிற்சி பெற்றவர் செயல் தலைவர் தளபதி அவர்கள். 

 

சென்னை மாநகராட்சியின் மேயராக தளபதி அவர்கள் ஆற்றிய பணிகள் பாராட்டிற்குரியவை. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, ஆய்வகங்கள் உட்பட பல கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தேர்ச்சி விகிதம் பெருமளவு உயர காரணமாக இருந்தார். சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 9 நெருக்கடியான முக்கிய இடங்களில் மேம்பாலங்களைக் கட்டி முடித்தார். வடிகால் அமைப்பு, சுகாதாரம், குப்பை கழிவுகளை அகற்றல் இவற்றிற்கு நல்லதொரு தீர்வை அளித்தார். சென்னையில் பல இடங்களில் நடைபாதையுடன் கூடிய பல அழகிய பூங்காக்கள் அமைக்கச் செய்தார்.

 

உள்ளாட்சித்துறை அமைச்சராக தளபதி அவர்கள் மகளிர் சுய உதவிக் குழு  திட்டத்தை பெரிதும் ஊக்குவித்தார். இவர் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது புதிதாக 22.67 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், 6,364.37 கோடி சுழல் நிதி பெற்றுள்ளனர். அவரது முயற்சியால் தமிழகமெங்கும் கணினி நிர்வாக முறை செயல்படுத்தப்பட்டது. தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் வெளிப்படைத் தன்மையை உருவாக்க முயன்றார். உள்ளாட்சித்துறை அமைச்சாராக கிராமப்புறங்களுக்கு குடிநீர் விநியோகத் திட்டம், ஊராட்சிப்பள்ளிகளை சீரமைக்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை திறம்பட செயலபடுத்தியவர். தமிழகத்தின் துணை முதலமைச்சராக திறம்பட செயலாற்றியவர்.

 

கழகத்தின் இளைஞரணிச் செயலாளராக, பொருளாளராக திறம்பட செயலாற்றியவர் தளபதி. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் “நமக்கு நாமே” என்ற தாரக மந்திரத்துடன் பயணம் மேற்கொண்டார். பெறுப்பான எதிக்கட்சித் தலைவராக தமிழக மக்களின் நலன் கருதி பல போராட்டங்களை முன்னெடுத்துவருபவர்.

 

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் வழி நின்று கழகத்தின் வளர்ச்சிக்காகவும், சமூக நீதிக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும், தமிழ் மொழியின் மேன்மைக்காகவும் தளபதி அவர்கள் அயராது உழைப்பார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. அத்தனைக்கும் மேலாக ஓய்வின்றி உழைக்கக்கூடிய தளபதி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று மகளிரணி உளமாற விரும்புகிறது, முன்மொழிகிறது.


 

சார்ந்த செய்திகள்