Skip to main content

‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’- சோதனை ஓட்டம் தொடக்கம்

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

'Cell Broadcast Alert' - Start of test run

 

‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ முறை என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும். இதில் ஒரு  செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்பேசிகளுக்கும், இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வசதி உள்ளது. கடுமையான வானிலை எச்சரிக்கைகள் (எ.காட்டாக : சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்றவை) பொதுப் பாதுகாப்புச் செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ பயன்படுத்தப்பட உள்ளது. இத்தொழில்நுட்பம் பேரிடர் எச்சரிக்கை தகவல்கள், சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளை பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பரவலாக தெரிவிக்க பயன்படுத்தப்பட உள்ளது.

 

அந்த வகையில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம். ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரிடமும் ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ அமைப்பின் சோதனையினை இன்று (20.10.2023) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தொடங்கியுள்ளது. இது குறித்து பேரிடர் மேலாண்மைத் துறையின் இயக்குநர் தெரிவிக்கையில், “சோதனைக் காலத்தில், பொதுமக்களின் செல்போன்களில் அவசர எச்சரிக்கைகள் பெறப்படும். இந்த விழிப்பூட்டல்கள் திட்டமிட்ட சோதனைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும் என்றும். உண்மையான அவசரநிலையைக் குறிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சோதனை ஓட்டத்தால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர்களின் போது அவசரகால தகவல்தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின்  பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ சோதனை ஓட்டம் இன்று (20.10.2023) காலை 11.30 மணியளவில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனை நாடு முழுவதும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி பொது மக்களின் செல்போன்களுக்கு எமர்ஜென்சி அலர்ட் சோதனை என்று சொல்ல கூடிய செல் ஒலிபரப்பு எச்சரிக்கை அனுப்பப்பட்டு வருகிறது. இந்த எச்சரிக்கையானது ஆங்கிலம் மற்றும் தமிழ் என குறுஞ்செய்தி மற்றும் எச்சரிக்கை ஒலியுடன் அனுப்பப்பட்டு வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்