Skip to main content

தலைக்கேறிய போதை; தூக்கி வீசப்பட்ட இளைஞர் - நள்ளிரவில் நடந்த கோர சம்பவம்! 

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

car rammed into an inebriated man and passed away

 

அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது செந்துறை கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் கொளஞ்சி. 60 வயதான இவர், தான் வசிக்கும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய தொழிலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்லம்மா. இந்த தம்பதியின் மகனான சீமான் என்பவருக்கு 32 வயதாகிறது. மேலும், இவருக்கு திருமணம் ஆகாததால் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார்.

 

இந்நிலையில், அரியலூரில் இருந்த சீமான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்துள்ளார். மேலும், கோவைக்கு வந்தவர் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையில், சீமானுக்கு மது அருந்தும் பழக்கம். தான் வேலைக்கு செல்லாத நாட்களில் அடிக்கடி மது குடித்துவிட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

 

அந்த வகையில், கடந்த 9ஆம் தேதியன்று சீமான் வேலை தொடர்பாக பல்லடம் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு தனது வேலையை முடித்துக்கொண்டு மது அருந்தியுள்ளார். இதனிடையே, தலைக்கேறிய போதையில் இருந்த சீமான் நடுரோட்டில் அங்கும் இங்குமாய் சுற்றித் திரிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அன்றிரவு 11 மணியளவில் பல்லடத்துக்கு அருகே உள்ள காளிவேலம்பட்டி என்ற இடத்திற்கு வந்துள்ளார்.

 

அப்போது அங்கே இருக்கும் கொங்கு திருமண மண்டபத்தின் முன்பு போதையில் அங்குள்ளவர்களிடம் தகராறு செய்திருக்கிறார். மேலும், அந்த வழியாக வரும் வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில், அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சீமான் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட சீமான் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதற்கிடையில், சீமானின் உடல் சாலையில் நடுவிலேயே இருந்துள்ளது.

 

ஆனால், அது இரவு நேரம் என்பதால் சீமானின் சடலம் மற்ற வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை என கூறப்படுகிறது. மேலும், அந்த இடத்தில் வெளிச்சம் இல்லாத காரணத்தால் சுமார் 6 நிமிடத்திற்கு மேலாக பேருந்து, லாரி, கார் என அடுத்தடுத்து 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் சீமானின் உடலில் ஏறி இறங்கியது. ஒருகணம், இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

அதன்பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் உயிரிழந்த சீமானின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த விபத்து சம்பவம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, உயிரிழந்த சடலத்தின் மேல் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து ஏறிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.