
வழக்கறிஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், ஜூன் மாதம் முதல் வழக்கமான முறையில் நீதிமன்றங்களைச் செயல்படச் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தில் அமல்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“கரோனா ஊரடங்கு காரணமாக, நீதித்துறை பணிகள் நடக்காததால் பாதிக்கப்பட்டுள்ள நலிந்த வழக்கறிஞர்களுக்காக உருவாக்கப்பட்ட நிதியத்துக்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி கிடைத்துள்ளது. இதில், பார் கவுன்சில் நிதியத்துக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சார்பில் 1 கோடி ரூபாயும், பார் கவுன்சில் சார்பில் 1 கோடி ரூபாயும், இந்திய பார்கவுன்சில் சார்பில் 1 கோடி ரூபாயும் அளித்தது அடக்கம். இந்தத் தொகையை, நலிந்த வழக்கறிஞர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. 17,000 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 12 ஆயிரம் வழக்கறிஞர்கள் நலிந்த வழக்கறிஞர்கள் எனக் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும். வரும் திங்கள் கிழமை முதல், இந்த உதவிகள் அந்தந்த மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்கள் மூலம், சென்னையில் சிறப்பு கவுண்டர் அமைத்து வழங்கப்படும்.
சென்னை உயர்நீதிமன்றம், மதுரைக் கிளை தவிர, கீழமை நீதிமன்றங்களில் வீடியோ கான்பரன்சிங் வசதி இல்லாததால், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக ஜூன் மாதம் முதல் நீதிமன்றங்களை செயல்படச் செய்ய வேண்டும் எனத் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுக்க உள்ளோம்.
ஜூன் மாதம் முதல் நீதிமன்றம் செயல்படுவதாக இருந்தால், உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைகளைப் பின்பற்ற தயாராக இருக்கிறோம். நீதிமன்றங்கள் திறக்கப்பட்டால் சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.