
கரூர் மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டி முதல் வீரசிங்கம்பட்டி வரை தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று வெளியாகி மக்கள் மத்தியில் வைரலாகியது. இதனையடுத்து தரமற்ற சாலை அமைக்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் சார்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (MGSMT) கீழ் தரகம்பட்டி முதல் வீரசிங்கம்பட்டி வரை உள்ள தார்ச்சாலையை புனரமைத்தல் பணி மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு. ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு வரப்பெற்ற ஒப்பந்தப்புள்ளிகளில் குறைந்த விலைப்புள்ளி அளித்த நிறுவனத்திற்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டது.
இந்த வேலை உத்தரவு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பேட்ச் ஒர்க் முடித்து கடந்த 6 ஆம் தேதி (06.10.2023) காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 1050 மீட்டர் மட்டும் தார்ச்சாலை போடப்பட்டது. தார்ச்சாலை போடப்பட்டு முழுமையாக செட் ஆவதற்கு 48 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை ஆகக்கூடிய சூழ்நிலையில், வீரசிங்கம்பட்டி குக்கிராமத்தில் ஈஸ்வரி என்பவரது வீட்டின் அருகில் இறுதியாக தார்ச்சாலை மாலை 6.00 மணிக்கு முடிக்கப்பட்ட இடத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் தார்ச்சாலையை சேதப்படுத்தியுள்ளனர். அதே சமயம் இரண்டு ஒப்பந்ததாரர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் தவறான வீடியோக்களை பதிவிட்டு உண்மைக்கு புறம்பான அதாவது தார்ச்சாலை தரம் இன்றி இருப்பதாக தவறான கருத்துக்களை பரப்பி மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசிற்கும் அவப்பெயரை ஏற்படுத்தினர்.

இதனையடுத்து சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்திட போடப்பட்ட சாலையில் சேதப்படுத்திய இடத்திற்கு அருகில், நீளம் + அகலம் 10 செ.மீ.+ 10 செ.மீ. மற்றும் ஆழம் 3.0 செ.மீ. என்ற அளவில் வெட்டி எடுக்கப்பட்ட போது ஆழம் 3.5 செ.மீ. இருப்பது தெரியவந்தது. இதன்படி கூடுதலாக தார்ச்சாலையின் கனம் 0.5 செ.மீ. இருந்தது தெரியவந்தது. வெட்டி எடுக்கப்பட்ட தார்சாலையின் மூலப்பொருட்கள் (தார் மற்றும் ஜல்லி) வெட்டி எடுத்து பயன்படுத்தப்பட்ட தாரின் அளவு மற்றும் ஜல்லி ஆகியவற்றின் அளவு குறித்து பரிசோதனை செய்யப்பட்டதில் 5.4% தார் இருக்க வேண்டிய இடத்தில் 5.5% இருந்தது ஆய்வில் தெரியவந்தது. இச்சாலையின் தரம் மேற்படி மூலப்பொருட்கள் தர ஆய்வு செய்யப்பட்டதின் அடிப்படையில், சாலை தரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரசு பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய நபர்கள் மீது காவல் துறை முலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.