Skip to main content

தாயை பிரிந்த குட்டி யானை; சோக செய்தியை வெளியிட்ட வனத்துறை

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Baby elephant dies after being separated from its mother

கோவையில் தாய் யானையை பிரிந்து தவித்து வந்த குட்டி யானை உயிரிழந்து விட்டதாக வனத்துறை அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் 30.05.2024 அன்று மயங்கிய நிலையில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்றை வனத்துறையினர் கண்டறிந்தனர். உடன் 4 மாத குட்டி யானையும் இருந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். அதே சமயம் தாயை எழுப்ப குட்டி யானையும் பாசப் போராட்டம் நடத்தியது. இதற்கிடையே தாயிடம் பால் குடிக்க முயன்ற குட்டி யானைக்கு லாக்டோஜன் மற்றும் இளநீர் போன்ற நீர் ஆகாரங்களை வனத்துறையினர் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து கிரேன் மூலம் யானை தூக்கி நிறுத்தப்பட்ட நிலையில் நோய் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. தொடர் சிகிச்சையின் பலனாக கிரேன் உதவியுடன் எழுந்து நிற்க வைக்கப்பட்டது. தொடர்ந்து நான்கு நாட்கள் கிரேன் மூலம் தூக்கி நிறுத்தி வைக்கப்பட்ட தாய் யானைக்கு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வந்தது. நாளுக்கு நாள் கொடுக்கப்பட்ட சிகிச்சை மூலம்  உடல்நலம் தேறிய நிலையில் கிரேனில் இருந்து வெளியேற்றப்பட்ட தாய் யானை வனப்பகுதிக்குள் தானாக சென்றது. ஆனால் குட்டி யானை தாய் எதிர்கொள்ளவில்லை. வனத்துறை முயற்சித்தும் தாய் யானையிடம் குட்டி யானையை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து கடந்த ஒன்பதாம் தேதி மருதமலையில் இருந்து  நீலகிரி தெப்பக்காட்டுக்கு கொண்டுவரப்பட்ட குட்டி யானை, யானைகள் வளர்ப்பு முகாமில் விடப்பட்டிருந்தது. இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்ட குட்டி யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது குட்டி யானை உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

நீலகிரி, கோவைக்கு கனமழை அறிவிப்பு

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Heavy rain forecast for Nilgiris, Coimbatore

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் மழைக்கான அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி நீலகிரி, கோவையில் ஒரு சில இடங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஏழு நாட்கள் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரிடங்களில் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

வனப்பகுதி ஓரத்தில் கிடந்த சாக்கு மூட்டை; அதிர்ந்த போலீசார்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Human bones in a sack lying on the edge of the forest; Police investigation

தாளவாடி அருகே வனப்பகுதி ஓரத்தில் சாக்கு மூட்டையில் மனித எலும்புகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலைமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டாப்புரம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதுபற்றி உடனடியாக தாளவாடி காவல்துறைக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்ததில் உள்ளே மனித எலும்புகள் இருந்தது தெரிய வந்தது.

மனித எலும்பைக் கைப்பற்றிய காவல்துறையினர் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த மனித எலும்புகள் யாருடையது? யாராவது கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் தாளவாடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.