Skip to main content

'மேக் இன் இந்தியா' திட்டத்தில் பெருங்காயத்தின் பெரும் ஆதாயம்! - பா.ஜ.க அண்ணாமலையின் பிரச்சாரம்!

Published on 24/10/2020 | Edited on 24/10/2020

 

மோடியின் தலைமையிலான மத்திய பா.ஜ.க ஆட்சியின் திட்டங்களை மக்களிடம் பரப்பும் பணியைச் செய்து வருகிறார் தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை.

 

மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைக் கண்டித்து நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்த வரும் நிலையில், மேக் இன் இந்தியா திட்டத்தில், வீட்டுச் சமையலுக்குப் பயன்படும் பெருங்காயத்தில் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் கிடைக்கும் வருவாய் குறித்துப் பிரச்சாரம் செய்து வருகிறார் அண்ணாமலை. 

 

இது குறித்து பேசும் அவர் , "கடந்த ஆண்டு மட்டும் 1,500 டன் அளவிலான பெருங்காயத்தை ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளிலிருந்து சுமார் 942 கோடி செலவில் இந்தியா, இறக்குமதி செய்துள்ளது. ஃபெருலா வகை பெருங்காயம் நம் நாட்டில் இல்லாததால் நம்மால் சொந்தமாக சமையல் பெருங்காயத்தை உருவாக்க முடியவில்லை. 

 

பிரதமர் மோடி  அவர்களின் பெரும் முயற்சியால், இமாலய உயிர் வள தொழில்நுட்ப நிறுவனம் ஈரானைச் சேர்ந்த ஃபெருலா வகையை இந்தியாவில் விளைவிற்பதற்கு, ஹிமாச்சல பிரதேசத்தில் 300 ஹெக்டர் நிலத்தை அடையாளம் கண்டு, அக்டோபர் 17 -லிருந்து நாற்றுகளைப் பயிரிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே முதன்முறையாக பெருங்காயம்,  உள்நாட்டு விவசாயிகளால் விளைவிக்கப்பட்டு நமக்குக் கிடைக்கும். 

 

cnc

 

சுமார்  3 லட்சம் ரூபாய் வரை ஒரு ஹெக்டருக்கு செலவு செய்தால், 5 வருடங்களில், வருடத்திற்கு சுமார் ரூபாய் 10 லட்சம் வரை நிகர லாபம் விளைச்சல் தரும். மத்திய, மாநில அரசுகளின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியால் விவசாயிகள் இதில் பெரும் லாபம் பெற முடியும். குளிர் பாலைவன பகுதிகளான ஹிமாச்சல பிரதேஷ், லடாக், காஷ்மீர், உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேஷ் போன்ற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இது பெரும் வரப்பிரசாதம் ஆகும். முடியாது என்று பலர் நினைத்ததை முடியும் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறது மோடியின் அரசு. ஏழை மற்றும் விவசாயிகளின் வாழ்வில் பெரும் ஆதாயம் ஆனது பெருங்காயம்" என்கிறார் அண்ணாமலை.

 

 

 

சார்ந்த செய்திகள்