![Anarchic youth; There is no bail at all - the blind judge](http://image.nakkheeran.in/cdn/farfuture/fhM6Ad_nDzq8nHxYBL17MkAesxknLq4sG0eFBwqLWMg/1668684445/sites/default/files/inline-images/n2262.jpg)
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ளது மீனாட்சி அரசு கலைக் கல்லூரி. கடந்த நான்காம் தேதி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலிருந்து அமரர் ஊர்தி ஒன்று சென்றுகொண்டிருந்தபோது, ஊர்தியின் முன்பாக சில இளைஞர்கள் மது போதையில் பைக்கில் அதிவேகத்துடன் ஒலி எழுப்பிக்கொண்டு இடையூறு செய்தவாறு சென்றனர். இதனைக் கண்ட கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். மேலும் அந்த இளைஞர்கள் கல்லூரி மாணவிகளைப் பார்த்துத் தகாத வார்த்தைகளால் கத்தியபடிச் சென்றனர்.
அப்பொழுது கல்லூரி வாசலில் நின்று கொண்டிருந்த மாணவி ஒருவரின் தந்தை ''ஏன் இப்படி காலேஜ் வாசல்ல அநியாயம் பண்றீங்க'' எனத் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது மது போதையிலிருந்த இளைஞர்கள் கும்பல், மாணவியின் தந்தையைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, ஹெல்மெட்டைக் கொண்டு அவரைத் தாக்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மதுரையின் மையப் பகுதியாக இருக்கும் கோரிப்பாளையத்தில் இப்படி ஒரு சம்பவம் அதுவும் அரசுக் கல்லூரி வாசலில் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் மதுரையில் உள்ள லேடி டோக் மகளிர் கல்லூரிக்குள் இருசக்கர வாகனத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞர் கும்பல் கல்லூரி காவலாளியை எட்டி உதைத்துத் தாக்கியதோடு அங்கு வந்த மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவங்கள் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனடிப்படையில் முத்து நவேஷ், சூர்யா, அருண்பாண்டியன், சேது பாண்டியன், மணிகண்டன், முத்து விக்னேஷ், வில்லியம் பிரான்சிஸ், அருண் உள்ளிட்ட பலரை கைது செய்த போலீசார் அவர்களைச் சிறையில் அடைத்தனர்.
ஆனால் தங்களுக்கு ஜாமீன் வேண்டுமென மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இளைஞர்கள் தரப்பிலிருந்து மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்களை நீதிபதி வடமலை விசாரித்தார். அப்பொழுது போலீசார் தரப்பில் இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களைக் கலைப்பார்கள். மேலும் அவர்கள் கல்லூரி காவலாளியைத் தாக்கியதோடு வாகனத்தைக் கொண்டு அவரைக் கொல்ல முயன்றுள்ளனர். கல்லூரி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். மேலும் இதில் சில இளைஞர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது எனத் தெரிவித்தனர். இதனை ஏற்ற நீதிபதி, யாருக்கும் ஜாமீன் கிடையாது என அவர்களின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.