Skip to main content

அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல்: வழக்கு ஒத்திவைப்பு! 

Published on 14/07/2022 | Edited on 14/07/2022
admk office seal chennai high court

 

அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக் கோரிய வழக்கின் விசாரணை நாளை (15/07/2022) ஒத்திவைக்கப்பட்டது. 

 

அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று (14/07/2022) நீதிபதி சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. 

 

அப்போது, நீதிபதி, அ.தி.மு.க. அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்கவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், பாதுகாப்பு தரவில்லை என்று வாதிட்டார். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறுவது தவறு என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை முடித்த பின் காவல்துறை பதிலளிக்கலாம் என்று அறிவுறுத்தினார். 

 

அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மோதல் ஏற்பட்ட போது, அதைத் தடுக்காமல் காவல்துறை அனுமதித்தது குறித்து ஆதாரம் உள்ளது. வீடியோ ஆதாரங்களைப் பார்த்தால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்தது தெரியும். சட்டம்- ஒழுங்கை காக்க காவல்துறை தவறிவிட்டது என வாதிட்டார். 

 

இதையடுத்து, நீதிபதி சதீஸ்குமார், பொதுக்குழு வழக்கில் தீர்ப்பளித்த நிலையில், கட்சி அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், கட்சி அலுவலகத்திற்குள் நுழைய எந்தத் தடையும் இல்லை. வானகரத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி, எந்த சரிபார்ப்பும் இல்லாமல் என் மீது குற்றம்சாட்டியுள்ளார். பொருளாளர் என்ற முறையில் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார் என்று வாதிட்டார். 

 

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கணினி, கோப்புகளை எடுத்துச் சென்றனர். அ.தி.மு.க. அலுவலகத்தை 400 பேர் முற்றுகையிட்டு எங்களை அனுமதிக்காமல் தடுத்தனர். இரு தரப்பு தகராறு முற்றியதால் சட்டம்- ஒழுங்கை காரணம் காட்டி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார். 

 

இதற்கு நீதிபதி, அலுவலகத்திற்கு சீல் வைத்ததை எதிர்க்கிறீர்களா? ஆதரிக்கிறீர்களா? என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் கேள்வி எழுப்பினார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று வாதிட்டார். 

 

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் கட்சி அலுவலகத்தை ஒப்படைக்க மனுவில் ஓ.பன்னீர்செல்வம் கோரியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்க அ.தி.மு.க. அலுவலகம் ஒன்றும் தனிநபர் சொத்து அல்ல. ஓ.பன்னீர்செல்வம் தற்போது ஒருங்கிணைப்பாளரும் அல்ல, அவரைக் கட்சியிலிருந்து நீக்கி தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம் எனத் தெரிவித்தனர். 


எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சதீஸ்குமார், வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று காலை முதல் மாலை வரை நடந்ததை வீடியோ ஆதாரங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளை மதியம் 02.30 மணிக்கு ஒத்திவைத்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.