
ராமநாதபுரத்தில் ஒன்பது மாத கர்ப்பிணி பெண் ஒருவர் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் களத்தூர் பகுதியில் உள்ள குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த காவல்துறையினர் குளத்தில் மிதந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலத்தை மீட்டனர். அப்பெண்னின் உடலானது பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் குளத்தில் இறந்து மிதந்த பெண் ஒன்பது மாத கர்ப்பிணி என்பது தெரியவந்தது. அவருடைய வயிற்றில் இருந்து பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் எடுக்கப்பட்டது.
குளத்தில் உயிரிழந்து கிடந்த அந்த பெண் யார் எதனால் இந்த பகுதியில் உயிரிழந்தார்; இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக போலீஸ் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்பது மாத கர்ப்பிணி பெண் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.