Skip to main content

வேலை வாங்கி தருவாக 5.60 லட்சம் ரூபாய் மோசடி: மாஜி அரசு ஊழியர் கடத்தல்... நில புரோக்கர்கள் உள்பட 4 பேர் கைது!

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

5.60 lakh rupees fraud for buying a job; Abduction of former government employee; 4 arrested including land brokers!

 

அரசு வேலை வாங்கிக் தருவதாகக் கூறி 5.60 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக மாஜி அரசு ஊழியரை, பாதிக்கப்பட்ட நில புரோக்கர் கூட்டாளிகளுடன் சென்று காரில் கடத்தினார். இச்சம்பவம் தொடர்பாக புரோக்கர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாஜி ஊழியரிடம் விசாரணை நடந்துவருகிறது.

 

சேலம் உடையாப்பட்டி காலனியைச் சேர்ந்தவர்கள் ஜலகண்டேஸ்வரன் மற்றும் வெங்கடேஷ்வரன். இவர்கள் இருவருக்கும் இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ஓட்டுநர் வேலை வாங்கித் தருவதாகக் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் (40) என்பவர் கூறியுள்ளார்.

 

மதுரை மாவட்டம் கே.புதூர் சர்வேயர் காலனியைச் சேர்ந்த சண்முகராஜேஸ்வரன் (43) என்பவருக்கு அரசுத்துறை உயர் அதிகாரிகளிடம் நல்ல செல்வாக்கு இருப்பதாகவும், அவரிடம் பணத்தைக் கொடுத்தால் நிச்சயம் வேலை வாங்கிக் கொடுத்துவிடுவார் என்றும் தெரிவித்துள்ளார். இதை நம்பிய ஜலகண்டேஸ்வரன், வெங்கடேஷ்வரன் ஆகிய இருவரும் 5.60 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். இந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்ட லட்சுமணன், அதை மதுரையில் உள்ள சண்முகராஜேஸ்வரனிடம் கொடுத்துள்ளார். 

 

கடந்த ஜனவரி மாதம் பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர்கள் இதுவரை வேலை வாங்கிக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அரசு வேலை வாங்கிக் கொடுங்கள் அல்லது பணத்தைத் திருப்பிக்கொடுத்துவிடும்படி பணம் கொடுத்தவர்கள் கூறியுள்ளனர். நெருக்கடி அதிகமானதால் லட்சுமணன், தன் நிலையைக் கூறி சண்முகராஜேஸ்வரனிடம் பணத்தைக் கேட்டுள்ளார். ஆனால் அவரோ பணம் வாங்கியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதனால் திருப்பித் தர முடியாது என்று கூறியிருக்கிறார். 

 

இதனால் ஏமாற்றமடைந்த லட்சுமணன், சண்முகராஜேஸ்வரனை கடத்திச் சென்று மிரட்டி, தான் கொடுத்த பணத்தை மீட்க திட்டமிட்டார். லட்சுமணன், நில புரோக்கராகவும் இருப்பதால், சேலத்தில் மலிவான விலையில் நிலம் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், அதைப் பார்க்க வருமாறும் சண்முகராஜேஸ்வரனை சேலத்திற்கு அழைத்துள்ளார். அதை நம்பி சேலம் சீலநாயக்கன்பட்டிக்கு வந்த சண்முகராஜேஸ்வரனை லட்சுமணன், அவருடைய தம்பி ஆனந்தன் (38) மற்றும் கூட்டாளிகள் 2 பேர் என நான்கு பேர் சேர்ந்து காரில் தாதகாப்பட்டியில் உள்ள ஆனந்தன் வீட்டிற்குக் கடத்திச் சென்று அடைத்துவைத்தனர். 

 

அவரை சரமாரியாக தாக்கிய அந்தக் கும்பல், பணத்தைக் கொடுத்தால்தான் விடுவிப்போம் என்றும் மிரட்டியுள்ளனர். இந்நிலையில் திங்கள்கிழமை (நவ. 22) அதிகாலை நேரத்தில் லட்சுமணனும் கூட்டாளிகளும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட சண்முகராஜேஸ்வரன், அவர்களிடமிருந்து தப்பித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்.

 

இதுகுறித்து விசாரித்த உதவி ஆணையர் அசோகன் மற்றும் காவலர்கள், லட்சுமணன், அவருடைய தம்பி ஆனந்தன் மற்றும் கூட்டாளிகளான மஞ்சுநாதன், கிருஷ்ணகுமார் ஆகியோரை மடக்கிப்பிடித்தனர். 

 

விசாரணையில், பணம் வாங்கிய மோசடி பேர்வழியான சண்முகராஜேஸ்வரன் கரூர் மாவட்டத்தில் சர்வே துறையில் கடந்த 2011ஆம் ஆண்டு அலுவலக உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளார். கிரானைட் மோசடி வழக்கில் இவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து, கைது செய்தனர். அதன்பிறகு பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். 

 

இதையடுத்து, அரசுத்துறை உயர் அதிகாரிகள் பலரை தனக்குத் தெரியும் என்று கூறி பலரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுவந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.