Skip to main content

நீதிமன்றத்திற்கு போன பிரபல நகைக்கடை நிறுவனம்... திமுக பிரமுகர் தலைமறைவு...

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

 

தமிழகத்தில் மிகப் பிரபலமான லலிதா ஜிவல்லரி பல ஊர்களில் தனது கிளைகளை நிறுவி வருகிறது. திருவண்ணாமலை நகரில் கிளை திறக்க முடிவு செய்த அந்த நிறுவனம், இதற்காக இடம் தேடியபோது, திருமஞ்சன கோபுரம் அருகே தனது பெயரில் இடம் இருப்பதாக திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபரும்,, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக பொருளாளராகவும் உள்ள பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
 


அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு தனது இடம் எனக் கூறிய பன்னீர்செல்வம், 1.75 கோடி ரூபாய்க்கு லலிதா ஜிவல்லரிக்கு இடத்தினை விற்பனை செய்துள்ளார். இடத்தை விற்பனை செய்தபின்னர் ராதா என்ற பெண் இந்த இடத்தில் எனக்கும் பங்கு உள்ளது எனச்சொல்லி பிரச்சனையை கிளப்பியுள்ளார். அதனைத் தீர்க்க மேலும் 1 கோடி பணம் கேட்டுள்ளார் பன்னீர்செல்வம்.

 

Tiruvannamalai




இதில் அதிர்ச்சியாகி அந்த இடம் தொடர்பாக லலிதா ஜிவல்லரி தரப்பு ஆய்வு செய்தபோது, அதில் வில்லங்கம் இருப்பது தெரியவந்துள்ளது. இது பற்றி ஜிவல்லரி தரப்பு, பன்னீர்செல்வத்தை கேட்டபோது, இன்னும் ஒரு கோடி தந்தால் தான் பிரச்சனை முடியும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இடம் வேண்டாம் பணத்தைத் திருப்பி தாருங்கள் எனக் கேட்டபோது, வாங்கிய தொகையையும் திருப்பி தரவில்லையாம். இது தொடர்பாக ஜிவல்லரி தரப்பு முக்கிய பிரமுகர்கள் மூலமாக பன்னீர்செல்வத்திடம் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பயனில்லாமல் போனதாம்.


 

 


இதனைத் தொடர்ந்து லலிதா ஜிவல்லரியின் திருவண்ணாமலை கிளை மேலாளர் பத்மநாபன் திருவண்ணாமலை மாவட்ட குற்றப் பிரிவில் புகார் தந்தபோது தனது தனிப்பட்ட செல்வாக்கு, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி விவகாரத்தை அமுக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து லலிதா ஜிவல்லரி தரப்பு இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி திருவண்ணாமலை மாவட்ட சிபிசிஐடி பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தன்னை கைது செய்துவிடுவார்களோ என பன்னீர்செல்வம் தலைமறைவாக இருக்கிறார் என்கிறார்கள் போலிஸ் தரப்பில். இந்த விவகாரம் குறித்து விவரம் கேட்டறிய பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் என வருகிறது. 


 

 

சார்ந்த செய்திகள்