
சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யும் கருவிகளை பொருத்தம் பணிகளை சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மேற்கொண்டு வருகிறது. இந்த தனியார் நிறுவனத்தில் கடலூர் பகுதியைச் சேர்ந்த சசிதரன் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் புவனகிரி அருகே நங்குடி கிராமத்தில் உள்ள மருதப்பனுக்கு சொந்தமான வீட்டில் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி செய்யும் கருவிகளை பொருத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இதற்கு உண்டான மின் உற்பத்தியைக் கணக்கீடு செய்யும் மின் அளவீட்டு கருவியை பொருத்த அவர் சேத்தியாதோப்பில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக உள்ள அம்பேத்கர் என்பவரிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர் ரூ 2 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுப்பதற்கு மனம் இல்லாததால் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு கடந்த 17-ஆம் தேதி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி ஏப் 21 ஆம் தேதி சேத்தியாதோப்பு அலுவலகத்தில் சசிதரன் ரூ 2 ஆயிரம் லஞ்ச பணத்தை உதவி மின் பொறியாளர் அம்பேத்கரிடம் வழங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணத்துடன் பொறியாளர் அம்பேத்கர் கைது செய்துள்ளனர்.