
கொலை செய்யப்பட்ட கிளாமர் காளி
மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்த காளீஸ்வரன் என்கிற கிளாமர் காளி என்பவரை கடந்த 22.03.2025 அன்று இரவு 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். கொலை செய்யப்பட்ட காளீஸ்வரன் என்கிற கிளாமர் காளி மதுரை தனக்கன்குளம் திமுக முன்னாள் மண்டல தலைவர் குருசாமியின் உறவினர் மற்றும் ஆதரவாளர் என்று தெரியவந்தது.

சிறையில் உள்ள வெள்ளை காளி
திமுக மண்டல செயலாளர் குருசாமிக்கும், அதிமுக முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டியன் உறவினரான ஏ பிளஸ் ரவுடியாக வலம் வந்த வெள்ளை காளி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து தெரியவந்தது. இந்த மோதல் காரணமாக மதுரை மாநகரில் பல கொலைகள் நடைபெற்றது தெரியவந்தது. வெள்ளை காளி வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் இருக்கும் நிலையில், வெள்ளை காளியின் ஏவுதலின் பேரில் இந்த கொலை நடந்ததா என்ற கேள்வி எழுந்தது.

என்கவுண்டர் செய்யப்பட்ட சந்திரபோஸ்
இதனைத் தொடர்ந்து ரவுடி வெள்ளை காளி குழுவில் இருந்த ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் 01/04/2025 அன்று இரவு என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே தமிழகத்தில் ரவுடிகள் என்கவுண்டர் சம்பவங்கள் அரங்கேறி வருவது அதிகமாகி வரும் நிலையில், பிரபல ரவுடி வெள்ளை காளியை என்கவுண்டர் செய்யக்கூடாது என அவருடைய மனைவி திவ்யா சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனுதாரரின் மனுவை பரிசீலித்து நான்கு வாரத்தில் உரிய முடிவை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.