
சமஸ்கிருத பாடல் ஒலிபரப்பி தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஐஐடி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மத்திய அமைச்சர்கள் நிதின்கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
கோவை சித்தாபுதூர் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,
ஐஐடியில் சமஸ்கிருத பாடல் ஒலிபரப்பியது தமிழர்களின் தன்மானத்திற்கும், தமிழின் தொன்மைக்கும் விடுக்கப்பட்ட அறைக்கூவல். செத்துப்போன சமஸ்கிருத பாடல் ஒலிக்கப்பட்டது மதச்சார்பின்மைக்கு விடுக்கப்பட்ட சவால். இச்செயல் சங்பரிவார் அமைப்புகளின் ஊதுகூலாக செயல்படும் மத்திய அரசின் ஆணவம், திமிர், கொழுப்பு. சமஸ்கிருதத்தை விட தமிழ் தொன்மையான மொழி எனவும், சமஸ்கிருத மொழி திணிப்பு பல நூற்றாண்டுகளாக திணிக்க முயன்று தோற்றுப்போனது.
இந்து, இந்தி, இந்துராஷ்டிரா ஆகியவற்றை செயல்படுத்தவே பிரதமராக மோடி உள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு செய்த ஐஐடி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அமைச்சர்கள் நிதின்கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்தி, சமஸ்கிருத திணிப்பின்.மூலம் தூங்குகிற புலியை மத்திய அரசு இடருகிறது எனக்கூறிய அவர், இச்செயலுக்கு உணர்வுள்ளவர்கள் கடுமையான கண்டனம் தெரிவிக்க வேண்டுமென தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலேஸ்வரம் முதியோர் இல்ல விவகாரம் தொடர்பாக காவல்துறை முழுமையான அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும் வைகோ தெரிவித்தார்.