Skip to main content

"பொதுக்குழுவே வருக என போஸ்டர் அடித்ததற்கு நீக்கமா?; ஸ்டாலின் முதல்வரே ஆக முடியாது"!-மு.க.அழகிரி பேச்சு...  

Published on 03/01/2021 | Edited on 04/01/2021
 MK Alagiri speech!

 

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரையில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இன்று (03/01/2021) உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "சதிகாரர்கள், துரோகிகளை எதிர்ப்பதற்கான முதல்படி இந்த கூட்டம். எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை தி.மு.கவின் கோட்டையாக மாற்றியது நான். இப்போதும் நான் உங்களில் ஒருவன். மதுரை நமது கோட்டை. இதை யாராலும் மாற்ற முடியாது. பேராசிரியர் அன்பழகனுக்கு தெரியாமல் என்னை கட்சியில் இருந்து நீக்கினர். திமுகவில் இருந்து வைகோ வெளியேறியபோது ஒருவர்கூட கட்சியைவிட்டு வெளியேற வில்லை. கலைஞரிடம் இல்லாததைச் சொல்லி என்னை கட்சியை விட்டு நீக்கி விட்டார்கள். உங்களுக்கெல்லாம் தெரியும் திருமங்கலம் தேர்தல். திருமங்கலம் என்றால் இந்தியாவே பயப்படுகிறது. திருமங்கலத்தில் நீங்கள் நினைப்பது போன்றும், மற்றவர்கள் நினைப்பது போன்றும் பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை. திருமங்கலம் எலக்ஷனில் நான் கோபித்துக் கொண்டு வெளியே இருந்தேன். அப்பொழுது கலைஞர், மைத்துனர், என்னுடைய தங்கை, கலாநிதி மாறன், தயாநிதி மாறன், இப்போது திமுகவின் தலைவராக இருக்கிற ஸ்டாலின் என எல்லோரும் வந்து என்னிடம் வந்து மன்றாடி நீங்கள்தான் திருமங்கலத்தில் வேலை செய்ய வேண்டும், பணிபுரிய வேண்டும் இது கலைஞர் விருப்பம் என்று சொன்னார்கள். நான் ஒத்துக் கொள்ளவில்லை. நீங்கள் என்னை அவமானப்படுத்தினீர்கள் நான் வேலை செய்ய மாட்டேன் எப்படியாவது போங்கள் என சொன்னேன்.

 

கலைஞர் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஃபோன் செய்து ஐ.பெரியசாமியை விசாரிக்கிறார். மு.கஅழகிரி ஒத்துக் கொண்டாரா இல்லையா? என. அதன்பிறகு மன்றாடி மன்றாடி பிறகுதான் ஒத்துக்கொண்டேன். திருமங்கலம் தேர்தலில் வேலை பார்க்கிறேன். நிச்சயமாக வெற்றி பெறுவதற்கு உறுதுணையுடன் என்னுடைய ஆதரவாளர்கள் நிற்பார்கள் என்று அவர்களிடத்தில் சொன்னேன். அதேபோல் திருமங்கலம் தேர்தல் வந்தது. வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தேன். நிருபர்கள் அப்பொழுது பேட்டி எடுத்தார்கள். வெற்றிபெற்று விடுவீர்களா எனக்கேட்டார்கள். நான், 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சொன்னேன். அதே 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அப்பொழுது வெற்றி பெற்றோம். ஆனால் பல மீடியாக்கள், பல பத்திரிகைக்காரர்கள் சொன்னார்கள் திருமங்கலம் ஃபார்முலா செய்து வெற்றிபெற்றார் என்று. 

 

 

என்ன ஃபார்முலா செய்தேன். 1000 ரூபாய் கொடுத்தார், 2000 ரூபாய் கொடுத்தார் என்றார்கள். நாங்கள் யாருக்குமே கொடுக்கவில்லை. எங்களுடைய உழைப்பு தான் அந்த வெற்றிக்கு காரணம். 1962 தேர்தலில், கலைஞர் தஞ்சாவூர் தேர்தலில் பெரிய பண முதலை பரிசுத்தநாடார் என்பவரை எதிர்த்து போட்டியிட்டார். அப்பொழுது நான் சின்ன பையன். நான் அப்போதே கட்சிக்காக வேலை பார்த்தேன். கலைஞர் எப்படி கையாள்கிறார் எனத் தெரிந்துகொண்டேன். நள்ளிரவு ஒரு மணிக்கு எழுந்து பூத்துக்கு செல்வார். அந்தப் பணியைத் தான் நாங்கள் திருமங்கலத்தில் செய்து, கட்சிக்காரர்களை ஊக்குவித்து வெற்றி பெற்றோம். ஃபார்முலா என்றால் கலைஞரின் உழைப்புதான் ஃபார்முலா என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

 

அப்படித்தான் திருமங்கலத்தில் நான் வெற்றிபெற்ற பிறகு என்னை சென்னைக்கு அழைத்தார்கள். சென்னைக்கு அழைத்து பாராட்டு தெரிவிப்பதுபோல் ஏர்போர்ட்டில் எனக்கு வரவேற்புக் கொடுக்க எத்தனை பேர் வந்தார்கள் தெரியுமா? சுமார் 10 பேர். எனக்கு எவ்வளவு தேர்தல் டென்ஷன் இருந்திருக்கும். திருமங்கலத்தில் ஜெயிக்கவில்லை என்றால் காங்கிரஸ் நம்மை விட்டுச் சென்றிருக்கும், அதோடு ஆட்சியே நம் கைவிட்டு போயிருக்கும் அதை மறந்து விட்டார்கள். வெறும் பத்து பேரை என்னை வரவேற்பதற்கு விமான நிலையத்திற்கு அனுப்பினார்கள். நான் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. கலைஞருக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றவேண்டும் என்பது தான் என்னுடைய மனதில் அப்போது இருந்தது.

 

mk alagiri press meet at madurai

 

உடனே கலைஞர் என்னை அழைத்து பொதுச் செயலாளரும், நானும் உனக்கு ஆணையிடுகிறோம் என்றார். 'என்னப்பா' என்று கேட்டேன். நீ தான் இனிமேல் தென் மண்டலத்தினுடைய அமைப்புச் செயலாளர் என்றார்கள். நான் உங்களுக்கு தொண்டனாக இருக்கத்தான் விரும்புகிறேன் தவிர, பதவியை எதிர்பார்த்து திமுகவில் நான் என்றைக்குமே இருந்ததில்லை. உங்களுக்கு தெரியாதா நான் பதவி வேண்டும் என நினைத்திருந்தால் எந்தப் பதவியும் உங்களிடம் கேட்டு வாங்கி இருக்கலாமே. இந்த தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை என்னைப்போல் உழைப்பவர்கள் வேறு யாருக்காவது கொடுங்கள் என்று சொன்னேன். அவர் ஒத்துக் கொள்ளவில்லை. இது எங்களுடைய கட்டளை என்று சொன்னார். அதன் பிறகு எப்படி மீற முடியும், சரி என்று ஏற்றுக் கொண்டேன். விமான நிலையத்தில் 10 மாவட்ட செயலாளர்கள், தென்மண்டல அமைப்புச் செயலாளர்கள் வரவேற்பு கொடுத்தார்கள். எல்லாம் நடித்தார்கள். இவர் வேகமாக வளர்ந்து வருகிறார் இவரை எப்படியாவது அமுக்க வேண்டும் என பல்வேறு திட்டங்களை போட்டார்கள். 2009 திருச்செந்தூர் எலக்சன் வந்தது, அனிதா ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தார். நானும் அவரோடு தான் வந்தேன். அப்போது நான் சொன்னேன் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் என்றேன். அதேபோல 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது நான்  திமுகவிற்கு செய்த துரோகமா? எண்ணிப்பாருங்கள்.

 

நாடாளுமன்ற தேர்தல் வந்தது 2009-ல் நான் போட்டியிட்டேன். என்னை வெற்றிபெற செய்தீர்கள் உங்களால் நான் அமைச்சரானேன். முதலில் அமைச்சர் பதவியை வேண்டாம் என்று சொன்னேன். கட்சியில் வலுக்கட்டாயமாக அமைச்சர் பதவி வழங்கினார்கள். 2009-ல் வெற்றி பெற்ற 10 தொகுதிகளில் 9 தொகுதிகளை வெற்றிபெற செய்தோம் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஒரே ஒரு தொகுதி தென்காசியை மட்டும் காங்கிரஸ் அன்று வெற்றிவாய்ப்பை இழந்தது. அதில் என்ன வேடிக்கை என்றால் முதல் முதலில் உதயசூரியன் சின்னத்தில் ஜெயிச்சது மதுரையில் நான்தான். அதுமட்டுமல்ல, என்னுடைய சுற்றுப்பயணத்தின் பொழுது நாகர்கோவிலுக்கு சென்றேன். நாகர்கோவிலில் கூட்டத்திலே பல பேர் பல கேள்விகள் எழுப்பினர். எங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் சின்னத்தை தொகுதிக்கு வாங்கிக் கொடுங்கள். இதுவரைக்கும் உதயசூரியன் இங்கு நின்றதே கிடையாது என்று சொன்னார்கள். நான் அப்பொழுதே அவர்களுக்கு சபதம் செய்து கொடுத்தேன். நிச்சயமாக உதயசூரியன் நாகர்கோவிலில் நிற்கும், வெற்றிபெறும் என உறுதி கொடுத்தேன்.

 

கலைஞர், என்ன இப்படி சொல்லிவிட்டு வந்துவிட்டாய் காங்கிரசிடம் எப்படி கேட்பது என்று கேட்டார். நீங்கள் கேட்க வேண்டாம் நான் காங்கிரஸிடம் கெஞ்சிக் கூத்தாடி வாங்கிக் கொள்கிறேன் எனச் சொல்லி திருநெல்வேலியை அவர்களிடம் கொடுத்துவிட்டு நாகர்கோவிலை நாம வாங்கினோம். இரண்டு இடத்தில் வெற்றி பெற்றோம். இது எல்லாம் கட்சிக்கு செய்த துரோகமா? இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகள் சொல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது; நேரம் போதாது.

 

 

திருமங்கலம் தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது மதிய உணவிற்காக எனது தம்பி ஸ்டாலின், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி போன்றவர்கள் எல்லாம் மதிய விருந்துக்கு என்னுடைய வீட்டிற்கு வந்தார்கள். இவர்கள் முன்கூட்டியே பேசி வந்திருப்பார்களா என எனக்குத் தெரியவில்லை. வந்து என்னிடத்திலே நீங்கள் எப்படியாவது கலைஞரிடத்தில் சொல்லி ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி வாங்கித் தரவேண்டும் என்று சொன்னார்கள். இது என்ன பெரிய விஷயம். இதை நான் எனக்காகவா கேட்கப் போகிறேன் ஸ்டாலினுக்குதானே கேட்கப் போகிறேன். நான் ஏதாவது பதவிக்கு ஆசைப்பட்டிருக்கிறேனா எனச் சொல்லி தொலைபேசியை எடுத்தேன். கலைஞர் 'என்னடா' எனக்கேட்டார். ஒன்னும் இல்லப்பா ஸ்டாலினுக்கு நீங்கள் பொருளாளராக பதவிக்கு கொடுங்கள் என்றேன். அன்று மாலையே பத்திரிகையில் 'பொருளாளர் ஸ்டாலின்' என வந்தது. 

 

ஏன் தெரியுமா நான் தென் மண்டல செயலாளர் ஆகிவிட்டேன் அந்த பொறாமை, அதனால் அவர் பொருளாளராக வேண்டும். எனக்கு ஈக்குவலாக இருக்க வேண்டுமாம். நான் எப்பொழுதும் அப்படி நினைக்கவே இல்லை. அதுமட்டுமல்ல இன்னொரு முக்கியமான ஒரு செய்தியை சொல்கிறேன். எனக்கு பொய் சொல்லி பழக்கம் இல்லை. பொய் சொல்லத் தெரியாது எனக்கு. திருமங்கலம் தேர்தல் நேரத்தில் இரவு என் வீட்டிற்கு தம்பி ஸ்டாலின், அவரது மனைவி, இன்னும் இரண்டு பேர் விருந்துக்கு வந்தார்கள். நானும், என் மனைவியும் சொன்னோம் ''ஸ்டாலின், கலைஞருக்குப் பிறகு நீதான் எல்லாம். உனக்காக எப்பொழுதும் பாடுபடுவேன்'' என அந்த வார்த்தையை சொன்னேன். அவரது மனசாட்சிக்கு தெரியும். இதை நான் அண்ணா மீதும், கலைஞர் மீதும் ஆணையிட்டு சொல்கிறேன். இந்த வார்த்தையை சொன்னேனா இல்லையா என்பதை அவர் மறுக்க முடியுமா?

 

இப்படியே சொன்னேன் 'நீ தான் எல்லாம், அடுத்த தலைவர் நீதான், அடுத்த முதலமைச்சர் நீதான், எனக்கு எந்த பதவியும் தேவையில்லை' என்றேன். ஆனால் அவர் ஏன் இப்படி துரோகம் செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. எனக்கே தெரியாமல் சிலபேரை நீக்குவார். எனக்கே தெரியாமல் சேர்ப்பார்கள் இப்படியெல்லாம் செய்தார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. பிறகு நான் அமைச்சராகி விட்டேன் என்ற கடுப்பு அவர்களுக்கு. நான் அமைச்சர் ஆனவுடன் அந்த அந்தஸ்துக்கு அவர் வரவேண்டும் என நினைத்தார். அமைச்சரான அடுத்த நாள் பெரியார் சிலைக்கும், அண்ணா சமாதிக்கும் மலர் வளையம் வைத்து விட்டு வாருங்கள் என கலைஞர் என்னிடம் சொன்னார். அண்ணா அறிவாலயத்தில் இருக்கிற அண்ணா சிலைக்கு முதலில் மாலை போட்டேன். அப்பொழுது, உங்களை கலைஞர் அழைக்கிறார் தனியாக பேசவேண்டுமாம் என்ற செய்தி வந்தது. இவ்வளவு பேர் இருக்கும்போது என்னிடம் மட்டும் தனியாக என்ன பேச நினைக்கிறார் என உள்ளே சென்றேன். என்ன விஷயம் என்று கேட்டேன். ஒன்றும் இல்லை, உன் தம்பி துணை முதல்வர் பதவி கேட்கிறார் கொடுக்கலாமா என்றார். நான் தாராளமா கொடுங்க. இது உங்கள் கட்சி, நீங்கள் உருவாக்கிய அறிவாலயத்தில்தான் நாங்களே நின்று கொண்டிருக்கிறோம். இதை என்னிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லையே. உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்றேன்.

 

என்னை எதற்கு கட்சியில் இருந்து நீக்கினார்கள்? நான் என்ன தப்பு செய்தேன்? எந்த தப்பும் செய்யவில்லையே. 'பொதுக்குழுவே வருக' என போஸ்டர் அடித்ததற்கு நீக்கமா? உங்களுக்கு போஸ்டர் அடிக்கவில்லையா? 'வருங்கால முதல்வரே' என உங்களுக்கு போஸ்டர் அடிக்கிறார்கள். நீங்கள் முதல்வராக முடியாது. அதற்காக நான் முதல்வராக வேண்டும் என்று ஆசைப்படவில்லை. ஸ்டாலின் அவர்களே முதல்வராக நீங்கள் வரவே முடியாது. என்னுடைய ஆட்கள், என்னுடைய ஆதரவாளர்கள் உங்களை நிச்சயமாக விடமாட்டார்கள்" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.