Skip to main content

காரியம் ஆகணும் என்றால் காலைப்பிடிப்பது என்பது இதுதானோ? 

Published on 17/03/2021 | Edited on 17/03/2021

 

ddd

 

தேர்தலில் வணக்கம் செலுத்தி வாக்கு சேகரிப்பது தவறு அல்ல. ஆனால் வயது வித்தியாசம் இல்லாமல் காலில் விழுவதால்தான் சுயநலம், பதவி வெறி என்ற விமர்சனம் எழுகிறது. தன்னைவிட 10 வயதுக்கும் மேலாக வயது குறைந்த தேனி எம்.பி. ரவீந்திரநாத்குமார் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியிருக்கிறார் 53 வயதான சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கம்.  

 

மதுரை மாவட்டம் சோழவந்தான் அதிமுக வேட்பாளராக மாணிக்கம் அறிவிக்கப்பட்டார். இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர். தனக்கு வாய்ப்பு கிடைத்ததும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், அவரது மகன்களுக்கும் நன்றிகளை தெரிவித்திருக்கிறார். மேலும் தனது வேட்புமனு தாக்கலின்போது தாங்களும் உடனிருக்க வேண்டும் என்று ரவீந்திரநாத்குமாரிடம் அன்போடு வலியுறுத்தியிருக்கிறார் மாணிக்கம். ‘எப்போது என்று நேரம் சொல்லுங்கள், வருகிறேன்’ என அவரும் கூறியிருக்கிறார். அதன்படி அவருடன் சென்றுள்ளார்.

 

ddd

 

16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு ஆசிர்வாதம் பண்ணுங்கண்னே என்று ரவீந்திரநாத்குமார் காலில் விழுந்தார் மாணிக்கம். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அனைவரும், பத்து வயதுக்கும் மேலாக வயது குறைந்தவர் காலில் விழுகிறாரே என்று அதிர்ச்சியானார்கள். அவரின் தோளை தொட்டு எழுந்திருங்கன்னு சொல்லி, வேட்புமனுவை தாக்கல் பண்ணுங்க என்று சொன்னார் ரவீந்திரநாத். 

 

வயது குறைந்தவர் காலில் விழுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள், ''வயது வித்தியாசம் பார்க்காமல் காலில் விழுவது பதவி வெறிதான். காரியம் ஆகணும் என்றால் காலைப் பிடிப்பது இதுதான்'' என்றும் கமெண்ட் அடித்துச் சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.