Skip to main content

“அரசுக்கே தெரியாமல் நடந்தது; அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை” - அமைச்சர் பொன்முடி விளக்கம்

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

unexpected event; Chepakkam stadium staff happy with Dhoni's action

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தமிழ், ஆங்கில வழியில் பொறியியல் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ் வழியிலான மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகக் கூறப்பட்டது. இதன் காரணமாகத் தனது கீழ் இயங்கும் 11 உறுப்புக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை குறைந்த பாடப் பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்தனர். இந்நிலையில் பாடப் பிரிவுகள் நிறுத்தப்படுவதாக சொன்ன அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்தார்.

 

இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒரு காலத்தில் நாங்கள் எல்லாம் படிக்கும்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூட தமிழ் வழிக் கல்வி கிடையாது. ஆங்கிலம் மட்டும் தான். இதை நான் பலமுறை சொல்லியுள்ளேன். அண்ணா வந்த பின் சமூகவியல் பாடப் பிரிவுகளில் தமிழ் வழிக் கல்வியைக் கொண்டு வந்தார். கலைஞர் வந்த பின்பு தான் அறிவியல் பாடப் பிரிவுகளில் தமிழ் வழிக் கல்வியைக் கொண்டு வந்து கல்லூரிகளில் தமிழைப் புகுத்தியவர் கலைஞர். அதுமட்டுமல்ல தமிழ் மொழியில் படிக்கும் மாணவர்களுக்கு 500 ரூபாய் உதவித்தொகை வழங்குவோம் என உத்தரவிட்டவரும் கலைஞர் தான். இந்தாண்டு சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப் பிரிவுகள் மட்டுமல்லாமல் மற்ற பிரிவுகளிலும் தமிழை புகுத்த வேண்டிய திட்டத்தை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு வருகிறோம். 

 

ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவு அரசுக்கே தெரியாது. அந்த முடிவு தவறானது என்பதை உணர்ந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார். தமிழ் மொழியில் பொறியியல் கல்வி என்பதை மற்ற பிரிவுகளிலும் விரிவுபடுத்தி படிப்பதற்கு ஆவண செய்யப்படும். அனைத்து துணை வேந்தர்களையும் அழைத்து பேசியுள்ளோம். எந்த பல்கலைக்கழகத்தில் எந்த புதிய பாடங்களைக் கொண்டு வந்தாலும், இருக்கின்ற பாடத்தை நீக்கினாலும் அரசின் செயலருக்கு அறிவித்த பின்பே செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். அதையும் மீறி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் செயல்பட்டுள்ளார். மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது என அவர் சொல்கிறார். குறைவாக இருந்தாலும்  இருக்கும் மாணவர்கள் படிப்பதற்கு ஆசிரியர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். நான் சொன்னதும் அவர் அதை மாற்றிக்கொண்டார்.

 

இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் என்று தெரிந்துதான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் சட்டம் ஒன்றை இயற்றினார். துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு வேண்டும் என்ற சட்டத்தை இயற்றினார். அதன் காரணமாகத்தான் மாநிலக் கல்விக் கொள்கையும் அதற்காக ஒரு குழுவையும் நியமித்து மாநிலக் கல்விக் கொள்கை வெகு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளில் அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.