Skip to main content

"வட்டியோடு பணத்தை கட்டு.." -ஏழை பெண்களுக்கு பைனான்ஸ் நிறுவனங்கள் டார்ச்சர்!

Published on 29/06/2020 | Edited on 29/06/2020
Company

 

அரசு மற்றும் ரிசர்வ் பேங்க் (RBI) அறிவிப்புக்கு மாறாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கடன் தவணைத் தொகையை செலுத்தவும், தவணை தவறிய தொகைக்கு அபராத வட்டி செலுத்தவும் நிர்பந்தம் செய்வதைத் தடுத்து நிறுத்துவதோடு கரோனா காலமான மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ஆறு மாத காலத்திற்கான வட்டியைத் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

இதன் தொடர்ச்சியாக, இன்று ஈரோடு மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி பொருளாளரும், மைக்ரோ பைனான்ஸ் டார்ச்சர் தடுப்புக்குழுவின் கன்வீனருமான எஸ்.டி.பிரபாகரன் தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் விரிவான கோரிக்கை மனு கொடுத்தார்கள்.

இதுபற்றி அவர்கள் கூறுகையில், "ஈரோடு மாவட்டத்தில்  ஆசிர்வாத், ஸ்மைல், ஜனலட்சுமி, சமஸ்தா, பெல் ஸ்டார், அரைஸ், அட்சயா, கிராம சக்தி, எல்அண்ட்டி, மதுரா, IDFC, HDFC, சொர்ணமித்ரா, சௌத் இண்டியன் பின்காப், தாரு பைனான்ஸ், சூரியாடே, முத்தூட் பைனான்ஸ், அசாம் பேங்க், எஸ் பேங்க், எக்விடாஸ், பீஎஸ்எஸ், சிக்ஸா, மித்ரா, உஜ்ஜீவன், விருச்சம், கிராமின் கோட்டா, மகா சேமம் சிரீவி, சிரீஹரி உள்ளிட்ட ஏராளமான மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

அன்றாடம் உழைத்து ஊதியம் ஈட்டி வாழ்க்கை நடத்தும் ஏழைக் குடும்பங்களை சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் பலர் தங்களது குழந்தைகளின் கல்வி, திருமணம், மருத்துவம் மற்றும் குடும்ப அவசரத் தேவைகளுக்காக,பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற இயலாத நிலையில், ஐந்து முதல் இருபது வரையான பெண்கள் ஒரு குழுவாக  இணைந்து கூட்டுப் பொறுப்பில், மேற்கண்ட மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர். இவர்கள் இதற்கான தவணைத் தொகையை கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் முறையாகச் செலுத்தி வந்தனர்.

 

ff

 

இப்போது, கரோனா ஊரடங்கால் அவர்களுக்கு வேலையின்றி, வருமானமின்றி வாழ்க்கை நடத்தவே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் மத்திய அரசும், ரிசர்வ் பேங்க்கும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்ககான நிவாரண நடவடிக்கைகளில் ஒன்றாக, அனைத்து வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் அனைத்து வகையான கடன் தவணைத் தொகைகளையும் செலுத்துவதற்கு மார்ச் முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளன.

ஆனால், மைக்ரோ பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் அரசு மற்றும் ரிசர்வ் பேங்க் உத்தரவுக்கு மாறாக கடன் தவணைத் தொகைகளை உடனடியாகச் செலுத்துமாறும், தவணை தவறிய தொகைக்கு அபராத வட்டி செலுத்துமாறும் இப்பெண்களைக் கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் வருகின்றனர். தவணைக் தொகைகளை செலுத்தக்கோரி இவர்களைப் பல்வேறு வகைகளில் நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர். இதனால் இப்பெண்களும், இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கும், பாதிப்புக்கும் உள்ளாகி வருகின்றனர்.

ஆகவேதான் அரசு நேரிடையாக தலையிட்டு, அரசு மற்றும் ரிசர்வ் பேங்க் அறிவித்துள்ளபடி இவர்களது கடன் தவணைத் தொகைகளைச் செலுத்துவதற்கு வரும் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும். தவணை தவறிய தொகைக்கு குறிப்பாக மார்ச் முதல் ஆகஸ்ட் வரையான ஆறு மாதங்களுக்கு  அபராத வட்டி வசூலிப்பதை தடுத்து நிறுத்தவும் உரிய நடவடிக்கைகளை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆட்சியரிடம் மனு வழங்கும் இந்நிகழ்வில், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி, கட்சி நிர்வாகிகள் மேலும் பாதிக்கப்பட்ட பெண்களும் திரளாக வந்திருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.