
நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் கடந்த மூன்று ஆண்டுகளாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக மூன்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை நேரில் அழைத்து கல்வி விருது வழங்கி வருகிறார். சமீபத்தில் மாமல்லபுரத்தில் முதற்கட்டம், இரண்டாம் கட்டம் என இரண்டு கட்டங்களாக நடிகர் விஜய் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளை நேரில் அழைத்துப் பாராட்டி கல்வி விருது வழங்கியிருந்தார்.
நடிகர் விஜய் மாணவிகளுக்கு கல்வி விருது வழங்குவதை விமர்சிக்கும் வகையிலும், அந்த விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களை விமர்சிக்கும் வகையிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் பொதுக்கூட்டம் நிகழ்வு ஒன்றில் விமர்சித்துப் பேசி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. வேல்முருகனின் பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு அவரை கண்டித்தும் வந்தனர்.
இதனை தொடர்ந்து, மூன்றாம் கட்டமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் விழா தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த 13ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அப்போது வேல்முருகனின் சர்ச்சைப் பேச்சு மாணவி ஒருவர் பதிலளித்து பேசியிருந்தார். விஜய்யிடம் கல்வி நிதியுதவி பெற்ற மாணவி ஒருவர் பேசியபோது, ‘சில வீடியோக்களை எல்லாம் பார்த்தேன். அதில், தோள் மேல் விஜய் கை போடுகிறார் என்று சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் அவரை எங்கள் அப்பாவாக, எங்கள் அண்ணனாக, எங்கள் உயிராகப் பார்க்கிறோம். அவர்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களை இப்படியெல்லாம் சொல்வார்களா? அப்படி சொல்லாதீங்க, அப்படி சொல்லக் கூடாது . விஜய்க்காக நாங்கள் இருக்கிறோம்’ எனப் பேசினார். அதனை தொடர்ந்து மாணவி ஒருவரின் தாய் பேசிய போது, ‘ஒத்த சீட்டுக்காக அலையும் சிலர் விஜய்யின் மாணவர்கள் சந்திப்பை குறித்து பேசக் கூடாது. விஜய் என் பிள்ளைகளுக்கு தாய் மாமன் போல தாய்க்கு இல்லாத உரிமை கூட தாய் மாமனுக்கு இருக்கிறது. சிலர் தற்குறித் தனமாக பேசி வருகின்றனர். அதை எல்லாம் கண்டு கொள்ளக் கூடாது’ என்று பேசினார்.
இந்த நிலையில், வேல்முருகன் மீண்டும் விஜய்யை சீண்டிப் பேசியுள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வேல்முருகன், “தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொண்டர்கள் தான் இந்த மண்ணின் வாழ்வுரிமை சிக்கல்களுக்காக களம் வந்தார்களே தவிர, எந்த ரசிகரும் களம் காணவில்லை, எந்த கதாநாயகனும் களம் காணவில்லை. ஆனால், இந்த உண்மையை உடைத்து பேசுகின்ற போது பல பேருக்கு ஆத்திரம் பொங்குது. பள்ளி மாணவர்களை வைத்து நமக்கு பதில் சொல்ல வைக்கிறார்கள். தற்குறி என்று சொல்கிறார்கள். தற்குறி என்று எங்களை சொல்லுகின்ற அந்த தற்குறிகளுக்கு நாங்கள் சொல்கிறோம், தமிழக வாழ்வுரிமை கட்சியின் வரலாற்றை என்னுடைய பக்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். வேல்முருகன் யார் என்று கேட்கிறார்கள். நீங்கள் எல்லாம் சினிமாவில் கட்டிபிடித்து ஆட்டம் போட்ட போது, தமிழர் விடுதலைக்காக களம் நின்று பணியாற்றியவன் தான் இந்த வேல்முருகன். படம் முழுவதும் முஸ்லிம் என்றால் தீவிரவாதிகள், முஸ்லிம் என்றால் தேசவிரோதி என்று காண்பித்து அந்த முஸ்லிம்களை மேடையில் நிறுத்தி கட்டி பிடிக்கிறிரீங்க. நான் பேசியது தவறு என்று மக்கள் சொல்லட்டும். அவர்கள் தான் எனக்கு எஜமான், அவர்கள் தான் எனக்கு ஓட்டு போடுவார்கள். நீங்கள் யார்?” எனப் பேசினார்.