Skip to main content

திமுக - மதிமுக இடையே தொகுதிப் பங்கீடு இறுதியாக வாய்ப்பு!

Published on 03/03/2021 | Edited on 03/03/2021

 

dmk and mdmk parties tn assembly election


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணியிலும், வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடத்தும் பணியிலும் தீவிரமாக இறங்கியுள்ளன.

 

அதன் தொடர்ச்சியாக, தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. குழு அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் தி.மு.க. தலைமை ஒதுக்கியுள்ளது. 

 

காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் தி.மு.க. தலைமை பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. ம.தி.மு.க. 8 தொகுதிகளைக் கேட்ட நிலையில், தி.மு.க. தலைமை 4 முதல் 6 தொகுதிகள் வரை வழங்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் வைகோ, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா மற்றும் அந்திரிதாஸ் உள்ளிட்டோர் தனியாக ஆலோசனை நடத்தினர். 

 

இந்த நிலையில் தி.மு.க.- ம.தி.மு.க. கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, இன்றே ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

 

 

சார்ந்த செய்திகள்