
சென்னை துரைப்பாக்கத்தில் ரூபாய் 5 கோடி மதிப்பிலான நிலத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அபகரித்ததாகக் கூறி, மகேஷ்குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, ஜெயக்குமார் மற்றும் அவரது மருமகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் ஜாமீன் கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தை அவர் நாடினார். இரு வாரங்களுக்கு திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் போலீசில் கையெழுத்திட வேண்டும் என்றும் அதன் பின்னர் திங்கட்கிழமைதோறும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், அவரும் அதனைப் பின்பற்றி வந்தார்.
இந்த நிலையில் திங்கள்கிழமை தோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தக் கோரி ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயக்குமார் வாரந்தோறும் ஆஜரானாலும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனக் கூறி நிபந்தனைகளை தளர்த்த தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து, ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருச்சியிலும், சென்னையிலும் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்றுவதாகவும் அவரது மருமகன் தொடர்பான விவகாரத்தில் அவரிடம் விசாரிக்க வேண்டியது ஒன்றும் இல்லை என்றும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வாரந்தோறும் திங்கட்கிழமை ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை தளர்த்தி ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது வார திங்கட்கிழமைகளில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார்.