Skip to main content

'ஒருதலைக் காதல் என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளை தடுக்க தனிச்சட்டம் வேண்டும்'-பாமக ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 14/10/2022 | Edited on 14/10/2022

 

"There should be a separate law to prevent atrocities in the name of one-sided love" - ​​Pmk Ramadoss emphasized

 

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சுவாதி கொலை வழக்கை போன்றே சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் இளம்பெண் ரயில்வே தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர் சதீஸ் தற்பொழுது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.  மேலும் மாணவியின் தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

பாமக நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை பரங்கிமலை புறநகர் தொடர்வண்டி நிலையத்தில், காதலை ஏற்க மறுத்ததற்காக மாணவி சத்யா தொடர்வண்டி முன் தள்ளிவிட்டு படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே, அவரது தந்தை மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்பட்ட இந்த கயமை கண்டிக்கத்தக்கது. மாணவி சத்யா, அவரது தந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவும், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞரும் சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சதீஷ் கஞ்சா போதைக்கு அடிமையானதால் அவருடனான காதலை சத்யா முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அதனால் மாணவி சத்யாவை சதீஷ் தொடர்ச்சியாக பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் உச்சகட்டமாக நேற்று பிற்பகலில் பரங்கிமலை தொடர்வண்டி நிலையத்தில் தகராறு செய்த சதீஷ், காதலை ஏற்க மறுத்த சத்யாவை தொடர்வண்டி முன் தள்ளிவிட்டு கொலை செய்திருக்கிறார். இதை தாங்க முடியாத சத்யாவின் தந்தை மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்யாவின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வரும் நிலையில்,  சத்யாவின் கொலை மற்றும் தந்தையின் தற்கொலையால் அந்த குடும்பமே உருக்குலைந்து போயிருக்கிறது.

 

"There should be a separate law to prevent atrocities in the name of one-sided love" - ​​Pmk Ramadoss emphasized

 

காதல் புனிதமானது என்பதில் ஐயமில்லை. இருவர் மனமும் ஒன்றுபடும் போதும், ஒருவரின் உணர்வுகளை இன்னொருவர் மதிக்கும் போதும் தான் காதல் புனிதமடையும். தொடக்கத்தில் சதீஷை காதலித்த சத்யா, பின்னர் அவரது தீய பழக்கங்களை அறிந்து தான் விலகிச் சென்றுள்ளார். அதை மதித்து சதீஷ் விலகியிருக்க வேண்டும். அது தான் சத்யா மீது சதீஷ் கொண்ட காதலுக்கு மரியாதையை சேர்த்து இருக்கும். அதற்கு மாறாக, நான் விரும்பினால் நீயும் விரும்ப வேண்டும்; இல்லாவிட்டால் படுகொலை செய்வேன் என்பது அரக்கத்தனமானது. இந்த கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

 

சத்யா காதலிக்க மறுத்த நிலையில், அவரிடம் கடந்த சில மாதங்களில் சதீஷ் 5 முறை தகராறு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு முறை சத்யா படிக்கும் கல்லூரிக்கு சென்ற சதீஷ், அங்கு பலர் முன்னிலையில் அடித்து உதைத்ததாக தெரிகிறது. இரு முறை சத்யாவை கொலை செய்ய முயன்றதாக சதீஷ் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ஒரு கட்டத்தில் இது குறித்து சத்யா குடும்பத்தினர்  காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். ஆனால், இருவரின் குடும்பத்தினரும் காவல்துறையில் பணி செய்வதை காரணம் காட்டி, சதீஷ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்து   காவல்துறையினர் அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட துணிச்சல் தான் மாணவி சத்யாவை கொலை செய்ய தூண்டியிருக்கிறது. காவல்துறையின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

 

ஆண்களைப் பெற்ற பெற்றோர் தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வழங்க வேண்டும்; அதற்கும் மேலாக பெண்களை மதிக்கும் குணத்தை கற்றுத்தர வேண்டும். பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை நல்வழிப்படுத்த தவறியதன் விளைவு தான் மாணவி சத்யாவின் படுகொலை ஆகும். ஒருதலை காதலால் பெண்கள் படுகொலை செய்யப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் சுவாதி என்ற பெண் பொறியாளரும், 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி தாம்பரம் தொடர்வண்டி நிலையத்தில் ஸ்வேதா என்ற மாணவியும் காதலிக்க மறுத்ததால் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டனர். 2016-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி விழுப்புரத்தையடுத்த வ. பாளையம் கிராமத்தில் காதலிக்க மறுத்த நவீனா என்ற சிறுமியை செந்தில் என்ற மிருகம் உயிருடன் எரித்துக் கொலை செய்தது. காதலிக்க மறுத்ததற்காக படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்களின் பட்டியலில் மிகவும் நீளமானது. ஒரு தவறும் செய்யாத பெண்கள், வெறி பிடித்த  மிருகங்களை காதலிக்க மறுத்ததற்காக கொலை செய்யப்படுவதை நாகரிக சமுதாயம் அனுமதிக்கக்கூடாது.

 

தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலம் என்று கூறப்பட்டாலும் கூட, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளும், அலுவலகம் செல்லும் பெண்களும் அச்சமின்றி சுதந்திரமாக சென்று வர முடியாத நிலைமை தான் இப்போதும் தொடர்கிறது. பெண்களை பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை மற்றும் சீண்டல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். இதற்காக மகளிர் தனிக்காவல் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் தடுக்க  தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.