Skip to main content

சட்டமன்ற தேர்தல்-2026; அக்டோபர் 28இல் முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

Published on 25/10/2024 | Edited on 25/10/2024
CM MK Stalin meeting On Oct 28 for tn Assembly Elections 2026

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுகவில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது என ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் இந்த குழுவின் மூலம் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்தக் குழுவில் துணை முதல்வரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர்  இடம்பெற்றுள்ளனர்.

அதோடு இந்த குழுவினர் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளைப் பரிந்துரைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த குழுவினர் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பல்வேறு அணியின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கூட்டங்களில் பல்வேறு முக்கிய முடிவு எடுக்கப்பட்டும் வருகிறது எனத் தகவல் வெளியாகி இருந்தது. ஏற்கனவே சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் சட்டமன்றத் தொகுதி வாரியாக திமுக பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

CM MK Stalin meeting On Oct 28 for tn Assembly Elections 2026

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் 2026ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நியமனம் செய்யப்பட்டுள்ள ‘சட்டமன்றத் தொகுதிப் பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்’ வருகிற 28.10.2024 (திங்கட்கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள ‘கலைஞர் அரங்கத்தில்’ நடைபெறும். இக்கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்