Skip to main content

“இந்திய அளவில் பேச வைக்கக்கூடிய மாபெரும் வெற்றியைத் தர வேண்டும்” - அமைச்சர் ஐ. பெரியசாமி

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
 ADMK symbol is left to wither says Minister I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி சார்பாகப் போட்டியிடும் சி.பி.எம். கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து ஆத்தூர் தொகுதி  சார்பாக நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம் பஞ்சம்பட்டி பிரிவில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி  தலைமை தாங்கினார்.  ஆத்தூர் கிழக்கு ஒன்றியச்  செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன், ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஐ.பி. செந்தில்குமார், திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி மற்றும் கூட்டணிக் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு ஆத்தூர் தொகுதியில் உள்ள ஆத்தூர் ரெட்டியார்சத்திரம் ஆகிய இரண்டு யூனியன்களில் இருந்து  பொறுப்பாளர்களும் பொதுமக்களும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

 ADMK symbol is left to wither says Minister I. Periyasamy

இக்கூட்டத்தில் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் சிபிஎம் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை அறிமுகம் செய்துவிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில்  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது, “கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது திமுக சார்பாக போட்டியிட்ட வேலுச்சாமி அதிக வாக்குகள் பெற்று இந்திய அளவில் 3ம் இடம் பெற்றார். அதைவிட ஒருபடி மேலே போய் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிடும் நமது கூட்டணி வேட்பாளர் சச்சிதானந்தம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற ஒவ்வொரு திமுக தொண்டனும் கடுமையாக உழைக்க வேண்டும்.

கட்சியினருக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒரே இயக்கத்தின் கீழ் இருக்கிறோம் என்பதை உணர்ந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். நம் கூட்டணி கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு செய்யும் தேர்தல் களப்பணியை பார்த்து நமது வேட்பாளர் போட்டியிடும் தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் தேர்தல் பணியாற்றும் அளவிற்கு நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்தியாவிற்கே வழிகாட்டுகின்ற தலைவராக தமிழகத்தில் 40க்கு 40 தொகுதிகளை மாபெரும் வெற்றி பெற வைக்கக்கூடிய தலைவராக உள்ள நமது முதல்வர் ஸ்டாலின், திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அருமை சகோதரர் சச்சிதானந்தம் அவர்களை நம்மிடம் ஒப்படைத்துள்ளார்.

 ADMK symbol is left to wither says Minister I. Periyasamy

கூட்டணி கட்சி சார்பாக போட்டியிடும் அவரை இந்திய அளவில் பேச வைக்கக்கூடிய அளவிற்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தர வேண்டும். நமது கழகத்தில் சாதாரண அடிமட்ட தொண்டனை, கட்சி நிர்வாகியை உயர் பதவி பெருமளவிற்கு கைப்பிடித்து உயர்த்தி உள்ளேன். தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு நமது மாவட்டத்தில் ஒவ்வொரு திமுக தொண்டனையும் உயர்த்தி உள்ளேன். கலைஞர் வளர்த்த இந்த இயக்கத்தில் பலர் கட்சி பொறுப்புக்கு வரலாம் அமைச்சர் பதவிக்கு வரலாம். அவர்களிடம் இல்லாத வரலாறு ஒன்று உள்ளது. அது என்னுடைய சரிதை எழுதினால் தெரியும். சுய சரிதை எழுதும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லாவிட்டாலும் எனக்கு பின்னால் வரக்கூடிய கட்சி நிர்வாகிகள் தெரிந்து கொண்டால் ஒரு மாவட்டத்தில் அடிமட்ட தொண்டன் முதற்கொண்டு மேல்மட்ட நிர்வாகிகள் வரை எப்படி நடத்த வேண்டும். எப்படி கட்சி வளர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்வார்கள்.

இந்தியாவில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40க்கு 40 தொகுதியும் மாபெரும் வெற்றியை இந்தியா கூட்டணி பெறும் அதற்கு நமது திராவிட ஆட்சி நாயகன் செயல்பாடுகள் உறுதுணையாக இருக்கும். இதுவரை நாம் தேர்தல் களத்தில் செய்யாத பணியை இப்போது நீங்கள் செய்ய வேண்டும். நீங்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து கூட்டணி கட்சியான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்துக்கு ஓட்டு சேகரிக்கும் போது குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஒவ்வொரு முறையும் பொதுமக்களை சந்திக்கும் போது, முதல்வர் ஸ்டாலின்  ஆட்சியில் மக்களுக்கான ஆட்சியின் செயல்பாடுகள் நலத்திட்டங்களை தினந்தோறும் பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்ய வேண்டும்.

நாம் கடந்த முறை முத்தமிழறிஞர் ஆட்சியில் இருந்தபோது 24 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கினோமோ, அதைவிட மாபெரும் சாதனையாக மகளிர் உரிமை தொகையை ஒரு கோடியே 18 லட்சம் பேருக்கு நமது முதல்வர் வழங்கி உள்ளார்கள். வருகின்ற 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் உங்கள் அக்கவுண்டில் 15 ஆம் தேதியே பணம் வந்துவிடும். இதுதான் திராவிட மாடல் ஆட்சி நாயகன் மு.க. ஸ்டாலின் ஆட்சியின் சாதனை. இந்தியாவில் இந்தியா கூட்டணி 360க்கு மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி மகத்தான சாதனை படைக்கும். நம் தேர்தல் பணியில் போட்டி வேட்பாளரே இல்லை என்ற எண்ணத்தில் தேர்தல் பணியாற்றக் கூடாது.

 ADMK symbol is left to wither says Minister I. Periyasamy

நீங்கள் ஒவ்வொருவரும் போட்டியிடுவது போல் நினைத்து தேர்தல் களப்பணியாற்ற வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும். 2009 தேர்தலில் என்.எஸ்.சி. சித்தன் போட்டியிட்ட போது, காங்கிரஸ் திண்டுக்கல் தொகுதியில் வீக்காக இருக்கிறது என்று அரசியல் பிரமுகர்கள் பேசினார்கள். ஆனால் அவர்கள் பேச்சு மொத்தத்தையும் தவிடுபொடி ஆக்கும் வண்ணம் ஒட்டுமொத்த வாக்காளர்களும் சித்தன் அவர்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்தார்கள்.

ஆத்தூர் தொகுதியில் 50 குடும்பங்கள் இருந்தால் கூட அப்பகுதியில் பாலங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. குடகனாறு, மருதாநதி, மாங்கரை, ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்டிக் கொடுத்தது முத்தமிழறிஞர் கலைஞர் அரசும், திராவிட மாடல் ஆட்சி நாயகன் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தான். ஆத்தூர் தொகுதி மட்டுமில்லை திண்டுக்கல்லுக்கும் சேர்த்து 550 கோடியில் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படும். இதன் மூலம் திண்டுக்கல், ஆத்தூர் தொகுதியில் குடி தண்ணீர் பிரச்சனை நிரந்தரமாகத் தீர்க்கப்படும்” என்றார்.

செயல்வீரர்கள் கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபானி, ஆத்தூர் நடராஜன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் வழக்கறிஞர் காமாட்சி, பொருளாளர் கு. சத்தியமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆ. நாகராஜன், மார்க்கிரேட் மேரி, பிலால் உசேன், மதிமுக மாவட்டச் செயலாளர் என். செல்வராகவன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி செயலாளர் பி.எஸ். ஜெயராமன், தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் தமிழரசன், சிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.பி. மணிகண்டன் எனக் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். நிறைவாக ரெட்டியார்சத்திரம் சி.பி.எம். கட்சி ஒன்றிய செயலாளர் கே.எஸ். சக்திவேல் நன்றி கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்