Skip to main content

'பாகங்கள் காணாமல் போகும், பைக்கைத் திரும்ப தருக' - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021

 

complete lockdown police vehicle admk chief o panneerselvam statement

 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துவருகின்றனர்.

 

இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று (25/05/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவல்துறை என்பது நாணயத்தின் இரு பக்கம் போன்றது. 'சட்டப்படி நடப்பவருக்கு நண்பர் எனும் பக்கம் தெரிய வேண்டும்; சட்டத்தை மீறுபவர்களுக்கு அச்சம் என்ற பக்கம்தான் தெரிய வேண்டும்' என்பார் ஜெயலலிதா.

 

வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் 08/05/2021ஆம் தேதியிட்ட அரசாணையின்படி 10/05/2021 முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், அத்தியாவசியப் பணிகளுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அந்தப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக வாகனங்களில் சென்று வர இ - பதிவு முறை செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், இ - பதிவு செய்யப்பட்ட வாகனங்களை மட்டும் அனுமதிப்பதற்கும், இ - பதிவு செய்யாமல், அனுமதியின்றிச் சட்டத்தை மீறி இயக்கப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்வதற்கும் காவல்துறையினருக்கு முழு உரிமை உண்டு. இதில் யாருக்கும் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.

 

ஆனால், இ - பதிவு முறையைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றைத் திரும்பத் தரக் கோரி வாகன ஓட்டிகள் இரண்டாவது நாளாக திருவொற்றியூரில் சாலை மறியல் செய்துவருவதாகவும் பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது. அவர்கள் மறியல் செய்வதற்கான மற்றொரு முக்கியமான காரணம், முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட தங்கள் வாகனங்களில் உள்ள உதிரி பாகங்கள் காணாமல் போகும் சூழ்நிலை உருவாகும் என்பதுதான்.

 

அவர்களுடைய கோரிக்கையில் நிச்சயம் நியாயம் உள்ளது. ஏற்கனவே முழு ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ள அவர்கள், தங்கள் வாகனங்களில் உள்ள விலை உயர்ந்த உதிரி பாகங்கள் சமூக விரோதிகளால் களவாடப்படுமேயானால், அந்த உதிரிப் பாகங்களைப் புதிதாக வாங்க பல ஆயிரம் ரூபாய்களை மேலும் அவர்கள் செலவழிக்க வேண்டிவரும். இதன்மூலம், அவர்கள் மேலும் கடனாளியாக ஆகக்கூடிய சூழ்நிலை உருவாகும். காவல்துறையினருக்கும் தற்போதுள்ள வேலைப் பளுவில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சேதாரம் ஏதுமில்லாமல் இருக்கின்றனவா என்பதை 24 மணி நேரமும் கண்காணிப்பது என்பது மிகவும் கடினமான செயல். 

 

எனவே, வாகன ஓட்டுநர்களின் நியாயமானக் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலனை செய்து, 'சட்டப்படி நடப்பவருக்கு நண்பர்' என்பதை நிலைநாட்டும் வகையில், சட்டத்திற்குட்பட்டு தமிழகத்தில் இ - பதிவு முறையில், அனுமதியோடு இயக்கப்பட்ட அனைத்து வாகனங்களையும், அதன் உரிமைதாரர்களிடம் உடனடியாகத் திருப்ப ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமாய் தமிழக முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.