சென்னை தியாகராய நகரில் பாரதிய ஜனதா கட்சியின் மருத்துவப் பிரிவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தமிழகத்திற்குப் பிரதமர் மோடி வந்தார். மோடி வந்த இரண்டு முறையும் ‘வெல்கம் மோடி’ என்ற ட்விட்டுகள் ‘கோ பேக் மோடி’ என்பதை விட 11 மடங்கு அதிகம். ஒவ்வொரு முறையும் 70 ஆயிரம் வரை ‘கோ பேக் மோடி’ என இருந்தால் ‘வெல்கம் மோடி’ என்பது 7 லட்சம் 8 லட்சம் என இருக்கிறது. இந்த முறை 9 லட்சத்தைத் தொடும். காலம் மாறிவிட்டது. களம் மாறிவிட்டது.
மனுஸ்மிருதி என்ற ஒன்றை ஆங்கிலேயப் பாதிரியார் வந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவர் எந்த மனுஸ்மிருதியை படித்தார் என்பது நமக்குத் தெரியாது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த புத்தகத்தைத் தமிழில் மொழி பெயர்க்கிறார்கள் இங்கிருக்கும் திராவிடர் கழகத்தினர்.
அப்படி மொழிபெயர்க்கப்பட்ட புத்தகத்தைத் திருமாவளவன் எடுத்துச் சென்று அனைவரிடமும் காட்டுகிறார். அவரிடம் நான் ஒன்று கேட்கிறேன். மனுஸ்மிருதிக்கும் பாஜகவிற்கும் என்ன சம்பந்தம். மனுஸ்மிருதிக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் என்ன சம்பந்தம். அந்த நூலைக் கொடுத்து தமிழக மக்களை பாஜகவிற்கு எதிராக மாற்றிவிடலாம் என நினைக்கிறார் திருமாவளவன். என்றும் ஆரோக்கியமான விவாதத்திற்கு பாஜக தயாராக இருக்கிறது.