
புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் குமார், நகர்ப் பகுதியான பாரதி வீதியில் அழகு நிலையம் வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் அவரது கடையின் பூட்டை உடைத்துத் திருட முயன்றுள்ளார். இது குறித்து குமார் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் தலையில் குல்லா மாட்டிக் கொண்டு கடையின் பூட்டை ஒருவர் உடைப்பது போன்று கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த உருவம் கடந்த 31 ஆம் தேதி ஒதியாஞ்சாலை போலீசாரால் குடி போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட திருவாரூரை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பது தெரியவந்தது. அதையடுத்து சிறையில் இருந்த ராஜமாணிக்கத்தை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில், அவர் மீது திருவாரூரில் வீட்டை உடைத்து கொள்ளை அடித்தது, பைக் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்க உள்ளனர்.