
ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் பைகனகுடா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமுகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இதனால் வீட்டில் இருந்து வெளியேறிய காதல் ஜோடி இருவரும், திருமணம் செய்துகொண்டு வேறு கிராமத்திற்குச் சென்று விட்டனர்.
இதனைத் தொடர்ந்து தங்களது சமூக பழக்க வழக்கத்தை மீறியதாக கூறி பைகனகுடா கிராமத்தினர் பெண் வீட்டார் 40 பேரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர். ஆனால், மீண்டும் 40 பேரும் ஊருடன் சேர்ந்துகொள்ள விரும்பினால், கோவில் முன்பு சுத்திகரிப்பு சடங்குகளை செய்ய வேண்டும் என்று கிராமத்தில் உள்ள பெரியோர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. அதன்படி கோவில் முன்பு கால்நடைகள் பலியிடப்பட்டு, சம்பந்தப்பட்ட 40 பேருக்கும் மொட்டையடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அனைத்து சடங்களும் முடிக்கப்பட்டு ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட 40 பேரும் கிராமத்திற்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 40 பேருக்கும் மொட்டையடிக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் இந்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து மாவட்ட காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.