Skip to main content

மராட்டியத்தில் மீண்டும் வென்ற தமிழர் கேப்டன் தமிழ்செல்வன்...

Published on 25/10/2019 | Edited on 25/10/2019

மராட்டிய மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 

 

tamilian won maharashtra assembly election

 

 

தமிழர்கள், மற்றும் பல வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வசிக்கும் சயான் கோலிவாடா தொகுதியில்  பாஜக வேட்பாளராக மீண்டும் களமிறங்கப்பட்டார் தமிழரான கேப்டன் தமிழ்செல்வன். அவரை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணியிலும் கணேஷ் குமார் யாதவ் என்ற ஒரு தமிழரே களமிறக்கப்பட்டார்.  கடும் போட்டிகளுக்கு மத்தியில் கேப்டன் தமிழ்செல்வன் 13921 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று  இரண்டாவது முறையாக எம் எல் ஏ ஆகியுள்ளார்.

கேப்டன் தமிழ்செல்வன் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் உள்ள  பிலாவிடுதி கிராமத்தில் பொதுவுடைமை குடும்பத்தில் பிறந்தவர். 25 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக மும்பை சென்றவர் ரயில்வே பார்சல் பிரிவில் கூலி வேலை செய்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பார்சல் ஒப்பந்தம் எடுத்து பலருக்கும் வேலை கொடுத்து வருகிறார். 

தீவிரவாதி கசாப் தாக்குதல் நடத்திய போது காயமடைந்த பலரையும் பார்சல் ஏற்றும் தள்ளுவண்டிகளில் ஏற்றி வெளியே கொண்டு வந்து காப்பாற்றிய பெருமையும் அவருக்கு உண்டு.

கூலி தொழிலாளிகள் நிறைந்த பகுதியில் அவர்களின் குறைகளை தீர்த்து வைப்பதால் அவரை கேப்டன் என்று அப்பகுதி மக்கள் அழைக்கத் தொடங்கினார்கள். தமிழர்கள் மட்டுமின்றி அங்கு வசிக்கும் அனைத்து தரப்பு மக்களிடமும் அன்பு காட்டியதால் கடந்த முறை பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டு வெற்றி பெற்றார்.

கடந்த ஜூன்  13 ந் தேதி தனது மகள் திருமணத்திற்கு மராட்டிய முதல்வரை புதுக்கோட்டை அழைத்து வந்து நடத்தினார். இந்த நிலையில் தான் தற்போதைய தேர்தலிலும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மராட்டிய சட்டமன்றத்திற்கு செல்லும் கேப்டன் தமிழ்செல்வன். அமைச்சரவையில் இடம் பெறவும் அதிக வாய்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.