Skip to main content

கேள்வி கேட்ட மல்லிகார்ஜுன கார்கே: கையெடுத்து கும்பிட்ட சபாநாயகர் 

Published on 10/02/2023 | Edited on 10/02/2023

 

Speaker Jagdeep Dhankar jokingly answered Mallikarjun Kharge's question Parliament

 

“நா அப்படி சொல்லவே இல்ல...” எனக்கூறி கையெடுத்து கும்பிட்ட துணைக் குடியரசுத் தலைவர், போற போக்க பாத்தா என் மேலேயே ACTION எடுப்பிங்க போல என்று நாடாளுமன்றத்தில் பேசியது பிரதமர் மோடி உள்ளிட்ட எம்.பி.க்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்துள்ளது.

 

2023 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர், கடந்த ஜனவரி 31 ஆம் தேதியன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து  2023 - 24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டையும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில், ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடிகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேசிய அரசியலிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும், இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் செய்தனர். இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் கடும் அமளியை சந்தித்து வருகிறது.

 

இத்தகைய காரசாரமான சூழலில், கடந்த 8 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆளும் பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அதுமட்டுமின்றி, அதானி விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

 

அப்போது, பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த கார்கே, திடீரென துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் பக்கம் திரும்பினார். அவரைப் பார்த்து, “நீங்க ஒரு பெரிய லாயர். எங்கிட்ட சொன்ன விஷயத்த எல்லாருக்கும் சொன்னிங்களா” என மல்லிகார்ஜுன கார்கே கேட்டவுடன், உடனே குறுக்கிட்ட ஜகதீப் தன்கர், “நா உங்ககிட்ட எவ்வளவோ விஷயம் சொல்லியிருக்கேன். அத பத்தி இங்க பேசுறது சரியா இருக்காது” என சிரித்தபடி கூறினார். அதற்கு பதிலளித்த கார்கே, “சரி அத விடுங்க... நா வேற ஒண்ணு சொல்றேன். நீங்க ஆரம்பத்துல லாயரா இருக்கும்போது, பணத்த கையால எண்ணிட்டு இருந்திங்க. ஆனா இப்போ மெஷின்ல எண்ணிக்கிட்டு இருக்கேன். அப்படினு என்கிட்ட சொன்னிங்களே அதாவது ஞாபகம் இருக்கா?” என சிரித்தபடி கேட்டுவிட்டார்.

 

அதற்கு ஜகதீப் தன்கர், “நா அப்படி சொல்லவே இல்ல... என கையெடுத்து கும்பிட்டு, போற போக்க பாத்தா... என் மேலேயே நாடாளுமன்ற கூட்டுக்குழுவ அமைச்சிடுவாங்க போல” என கிண்டலாக கூறினார். இதைக் கேட்ட பிரதமர் மோடியும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். மேலும், இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

- சிவாஜி

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியா? பதிலளித்த கார்கே

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதற்கிடையில், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில்,  இந்த மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார். அதே சமயம், ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. 

Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

இந்த நிலையில், இன்று (27-04-27) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில்,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். 

அப்போது அவர், “பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனாலும், மோடி நாட்டுக்காக நிறைய வேலை செய்துள்ளார் என்று கூறுகிறார். நான் அதிகம் பேச விரும்பவில்லை. காங்கிரஸ் இந்தியாவை சுதந்திரமாக்கியவர்களின் கட்சி. இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க ஒருபோதும் போராடவில்லை. இந்த நாட்டைக் கட்டியெழுப்பினோம். நேருவுக்கு ஒன்றுமில்லை, இந்திரா காந்தி ஒன்றுமில்லை, லால்பகதூர் சாஸ்திரி ஒன்றுமில்லை, மோடிதான் எல்லாம் என தேசப்பற்றைப் பற்றி பாஜகவினர் எவ்வளவோ பேசுகிறார்கள்.

2014க்குப் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்தது, அதற்கு முன் நாடு சுதந்திரம் அடையவில்லை என்ற எண்ணத்தை கூட வைத்துள்ளார்கள். இவை அனைத்தும் அவரது வார்த்தைகளில் பிரதிபலிக்கின்றன. இதில் வருத்தம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியால் வளர்க்கப்பட்டு, தலைவர்களாக மாறியவர்களும் இதையே சொல்கிறார்கள். காங்கிரஸ் மிகவும் மோசமாக இருந்திருந்தால், உங்கள் வாழ்நாளில் 30-40 வருடங்களை ஏன் தேவையில்லாமல் செலவழித்தீர்கள்?. இவர்களுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஆனால் அவர்களும் இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தியை விமர்சிக்கிறார்கள் எனப் பேசினார். இதனையடுத்து, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் சார்பாக யார் போட்டியிடுவார்கள் என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்கே, “சில நாட்கள் பொறுத்திருங்கள். எல்லாம் தெளிவாகிவிடும்” எனக் கூறினார்.

Next Story

நாடாளுமன்றத்தில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கிய என்.எஸ்.ஜி வீரர்கள்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
NSG soldiers landed in parliament by helicopter

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இறங்கி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்து  அத்து மீறி சிலர் வண்ணத்தை உமிழும் பொருட்களை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திற்குள் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனையடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு விமர்சனங்களையும் கருத்துகளையும் வைத்திருந்தனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக என்.எஸ்.ஜி வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் டெல்லி நாடாளுமன்றத்தின் வளாகத்திற்குள் இறங்கி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.