
மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990-ன் படி இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடைசியாக 2011இல் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதனையடுத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021க்கான முதல்கட்ட தயாரிப்புகள் அனைத்தும் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, களப்பணி சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2020 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்கவிருந்தது. ஆனால், நாடு முழுவதும் கொவிட் -19 பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் மத்திய பா.ஜ.க அரசு காலம் தாழ்த்தி வந்ததால், மக்கள் தொகையுடன் கூடிய சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தன. அதன்படி, சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகிற 2027 ஆம் ஆண்டு 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பா.ஜ.க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், கர்நாடகாவில் மீண்டும் புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த 2015இல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் ரூ.162 கோடி செலவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பலதரப்பட்ட மக்களின் சமூகம், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட விவரங்கள் திரட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அப்போது இருந்த சித்தராமையா தலைமையிலான அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் அந்த அரசாணைக்கு கர்நாடகாவில் இரு பெரும் சமூகங்களான ஒக்கலிகா, லிங்காயத்து ஆகிய சமூகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதனால், கணக்கெடுப்பு தொடர்பான விவரங்கள் வெளியிடப்படாமல் இருந்தது. அதனை தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், சித்தராமையாவின் ஆட்சி முடியும் தருவாயில் இருந்ததால் அது தொடர்பான அறிக்கையையும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், கர்நாடகாவில் மீண்டும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “நலத்திட்டங்களை வகுக்க மக்களின் நிலைமையை அறிய வேண்டும். கடந்த 2015இல் சமூக நீதியை வழங்குவதற்காக நாங்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வி கணக்கெடுப்பை நடத்தினோம். சக்திவாய்ந்தவர்கள் அதை எதிர்த்தனர். சக்திவாய்ந்தவர்கள் மற்றும் பலவீனமானவர்கள் என்று எதுவும் இல்லை. எச். காந்தராஜ் தலைமையிலான கர்நாடக மாநில நிரந்தர பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சாதி கணக்கெடுப்பை நடத்தி 10 ஆண்டுகள் ஆகின்றன. எனவே, கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் சட்டத்தின் பிரிவு 11 இன் படி, அறிக்கை 10 ஆண்டுகளாகி காலாவதி ஆனதால், ஒரு புதிய அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். எனவே, நாங்கள் ஒரு புதிய கணக்கெடுப்பை நடத்துகிறோம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில், மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளை செயல்படுத்த மாநில அரசு தவறியுள்ளதாக முதல்வர் சித்தராமையாவின் மகனும், காங்கிரஸ் எம்.எல்.சியுமான யதீந்திர சித்தராமையா தனது சொந்த கட்சியையே விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “நாம் சாதி கணக்கெடுப்பை வெளியிட்டு செயல்படுத்தியிருந்தால், அது பின்தங்கிய வகுப்பு சமூகங்களை வலுப்படுத்தியிருக்கும். இந்த சமூகங்கள் நீண்ட காலமாக ஓரங்கட்டப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பு அவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வழிவகுத்திருக்கலாம். ஆனால், சில சமூகங்களுக்குள் செல்வாக்கு மிக்க நபர்களின் எதிர்ப்பால், கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடவில்லை. இது மாநில அரசின் தவறு. இப்போது, 10 வருட பழமையான கணக்கெடுப்பு போல, முழு மக்கள்தொகையும் இதில் சேர்க்கப்படவில்லை என்றும், அதைச் செயல்படுத்த அனுமதிக்கவில்லை என்றும் அவர்கள் அற்பமான காரணங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்’ என்று விமர்சித்துள்ளார். இது தற்போது கர்நாடகா அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.