
2025 ஐபிஎல் போட்டியில் வென்ற ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கூட்டா நெரிசல் ஏற்பட்டதற்கு ஆர்சிபி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்றும், காவல்துறை அறிவுறுத்தலை மீறி வெற்றி பெற்ற அடுத்த நாளே வெற்றிக் கொண்டாட்டத்தை ஆர்சிபி நிர்வாகம் நடத்தியது என்றும் ஆர்சிபி நிர்வாகம் மீது தொடர் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் குறித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ), டி.என்.ஏ நெட்வொர்க்ஸ் மற்றும் சிலர் மீது கப்பன் பார்க் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதனிடையே, ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நடந்த துயர சம்பவம் தொடர்பாக அங்குள்ள எதிர்க்கட்சிகள், மாநில அரசை குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், பொதுமக்களும் மாநில அரசு மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதனால், அங்குள்ள அதிகாரிகள் மீது அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறிய பெங்களூர் மாநகர காவல் ஆணையர் பி.தயானந்த், கூடுதல் ஆணையர் விகாஸ் குமார், துணை ஆணையர் சேகர் உள்பட 5 அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்ட்டது. மேலும், ஆர்சிபி அணி நிர்வாகிகளான நிகில் சோஸ்லே, டி.என்.ஏவின் சுனில் மேத்யூ உள்ளிட்ட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதனிடையே, ஆர்சிபி வெற்றிப் பேரணியை அரசு சார்பில் நடத்தப்படவில்லை என்றும், ஆர்சிபி நிர்வாகம் தான் அதனை நடத்தியது என்றும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா திடீர் பல்டி அடித்தார். இது குறித்து பேசிய அவர், “காவல்துறையினர் கூட நிகழ்வை ஏற்பாடு செய்ய ஒப்புக்கொண்டனர். அப்போது தான் நான் பச்சை சமிக்ஞை காட்டினேன். அதன் பிறகு, கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளரும், செயலாளரும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுத்தனர். இது நான் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி அல்ல. அது அவர்களின் நிகழ்வு, அவர்கள் ஆளுநரைக் கூட அழைத்தார்கள். அதனால் நான் கலந்து கொண்டேன். அதை தாண்டி, எனக்கு எந்தப் பங்கும் இல்லை.
இந்த நிகழ்ச்சியின் பல விவரங்கள் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பான கடிதம் எனக்கு ஒருபோதும் எனக்கு வந்து சேரவில்லை. மக்கள் தொடர்பு இயக்குநரகம் (DPR) அனுமதி அளித்தது. எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தொடருங்கள் என்று கூறப்பட்டது. ஆனால், விதான சவுதா முன் அதை நடத்த நான் ஒருபோதும் உத்தரவிடவில்லை. பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும், இதை ஆதாயத்திற்காக அரசியலாக்குகின்றன. நான் காவல்துறையை மிரட்டினேன் என்று குமாரசாமி கூறுவது முழுப் பொய். நாங்கள் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். அவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்” என்று கூறினார்.
இந்த நிலையில், ஆர்சிபி வெற்றிப் பேரணிக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா தான் அதிகாரப்பூர்வமாக ஆளுநரை அழைத்ததாக அம்மாநில ராஜ்பவன் தெரிவித்துள்ளது. ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்துவதற்கு ராஜ்பவனுக்கு கர்நாடகா ஆளுநர் அழைக்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அந்த நிகழ்வு விதான சவுதாவில் நடைபெறும் என்று மாநில அரசு அவருக்கு தெரிவித்ததாகவும் ராஜ்பவன் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநரை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் அழைத்ததாக மாநில முதல்வர் சித்தராமையா கூறியதை அடுத்து, மாநில அரசு தான் தனக்கு அழைப்பு விடுத்தது என ராஜ்பவன் தெரிவித்திருப்பது பேசுபொருளாகி மாறியுள்ளது.