Skip to main content

“இப்படிப்பட்ட ஒருவரையா கடவுள் அனுப்பி வைத்தார்?” - ராகுல்காந்தி விமர்சனம்

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
Rahul Gandhi Criticizes pm modi

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டமாக 430 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, சாதாரண மனிதர்களைப் போல நான் பயலாஜிகலாக பிறக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வந்தது. இது குறித்து பிரதமர் மோடி அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த போது, “நான் பயலாஜிகலாக பிறக்கவில்லை என்று நம்புகிறேன். என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். 

ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன். என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. நான் மனிதப்பிறவி அல்ல. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்தப் பூமிக்கு அனுப்பியிருக்கிறார்” என்று தெரிவித்தார். இதற்குப் பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.

அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ இந்தியப் பிரதமர் ஒரு நேர்காணலின் போது, நான் பயலாஜிகல் ரீதியாக பிறக்கவில்லை, கடவுள் என்னை ஒரு பணிக்காக அனுப்பியுள்ளார் என்று வெளிப்படையாகக் கூறுகிறார். ஒரு சாதாரண நபர் இதையே சொன்னால், அவர்கள் நேராக மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டிருப்பார்.

கொரோனா பாதிப்பின் போது கடவுளால் அனுப்பப்பட்டவர் என்ன செய்து கொண்டிருந்தார். கோவிட் தொற்றுநோய்களின் போது இந்தியர்கள் கங்கை கடற்கரையில் இறந்து கிடந்தார்கள். ஆயிரக்கணக்கானோர், மருத்துவமனைகளுக்கு முன்னால் தங்கள் இறுதி மூச்சை எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது பிரதமர், இல்லை கடவுளால் அனுப்பபட்டவர் என்ன செய்தார்? கடவுளால் அனுப்பப்பட்டவர், உங்கள் மொபைல் போன் விளக்குகளை எரிய விடச் சொன்னார். இப்படிப்பட்ட ஒருவரையா கடவுள் அனுப்பி வைத்துள்ளார்?” என்று கூறினார்.  

சார்ந்த செய்திகள்