Skip to main content

சட்டப் பேரவைக்கு வந்த முதல்வருக்கு காத்திருந்த அதிர்ச்சி; புதுவையில் பரபரப்பு

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

puducherry rangasamy front of incident due land issue

 

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று காலை சட்டப் பேரவைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வில்லியனூர் அடுத்துள்ள கோர்காட்டு பகுதியைச் சேர்ந்த தவமணி என்பவரும் அவரது தம்பி மாசிலாமணியும் நின்றிருந்தனர். காரில் இருந்து இறங்கிய முதல்வர் ரங்கசாமி சட்டப் பேரவையின் நுழைவாயில் படிக்கட்டில் ஏறியபோது கதறி அழுதபடி தவமணி, முதல்வர் காலை பிடித்துக் கொண்டார். அதே வேளையில் மாசிலாமணி வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து தன் மீது பெட்ரோலை ஊற்றித் தீக்குளிக்க முயன்றுள்ளார். வாலிபரின் இந்தச் செயலைக் கண்டு முதல்வர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் மாசிலாமணி தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றும் போது முதல்வரின் கார் மீதும் விழுந்துள்ளது.

 

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து மாசிலாமணியிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை பறிமுதல் செய்தனர். தனது காலில் பெண் ஒருவர் விழுந்து கதறி அழுததையும், இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற காரணம் குறித்தும் அவர்களின் புகாரை தீர்த்து வைக்க முதல்வர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

இது குறித்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரித்த போது, அவர்கள் நிலத்தை மற்றொரு தரப்பினர் அபகரித்துள்ளனர். இது தொடர்பான பிரச்சினை இருந்து வந்துள்ளது. நிலத்தை அபகரித்தவர்கள் நிலத்தில் செம்மண் கொட்டி நிலத்தை வீணாக்கி உள்ளனர். இதனைத் தட்டிக்கேட்ட தவமணியை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சட்டப் பேரவைக்கு வந்து தீக்குளிக்க முயன்றோம் எனத் தெரிவித்துள்ளனர். சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமி முன்பாக பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க முயன்ற சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்