
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் இந்திய ராணுவம் முனைப்பு காட்டி வருகிறது. இதற்கிடையே தொடர்ந்து இரண்டாவது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் (08/05/2025) நாட்டின் பல பகுதிகளில் போர் ஒத்திகை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் நடக்கபோவதாக மூன்று நாட்களுக்கு முன்பே தெரியும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பஹல்காம் தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது. இதுகுறித்து முன்பே அறிந்துதான் காஷ்மீர் பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் தனது உயிருக்குக் கொடுக்கும் மதிப்பைச் சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு ஏன் கொடுக்கவில்லை. தகவல் வந்தவுடன் ஏன் காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.