Skip to main content

மம்தா தோல்வி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

Published on 14/07/2021 | Edited on 14/07/2021

 

MAMATA BANERJEE

 

மேற்கு வங்கத்தில் மார்ச் - ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தது. இந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில், தனது கட்சியிலிருந்து பாஜகவிற்கு தாவிய முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியை எதிர்த்து மம்தா போட்டியிட்டார்.

 

வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான அன்று, முதலில் மம்தா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்தில் சுவேந்து அதிகாரி வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் முடிவினை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக மம்தா, முடிவுகள் வெளியான அன்றே தெரிவித்திருந்தார். அதன்படியே கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கை முதலில் கௌஷிக் சந்தா என்ற நீதிபதி விசாரிப்பதாக இருந்தது. ஆனால் கௌஷிக் சந்தாவிற்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதால், அவர் இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து கௌஷிக் சந்தா இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக்கொண்டார்.

 

இதனையடுத்து ஷாம்பா சர்க்கார் என்ற நீதிபதிக்கு, இந்த தேர்தல் முடிவிற்கு எதிரான வழக்கை விசாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஷாம்பா சர்க்கார், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க சுவேந்து அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும், நந்திகிராம் தேர்தல் தொடர்பான ஆவணங்கள், தேர்தல் பேப்பர்கள், தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், தேர்தலின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் உட்பட அனைத்தையும் பாதுகாக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதி ஷாம்பா சர்க்கார் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு அவர் ஒத்திவைத்துள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பக்கா பிளான்; பாதிக்கப்பட்ட பெண்ணை வேட்பாளராக களமிறக்கிய பாஜக!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Sandeshkhali Rekha Patra announced as BJP candidate for parliamentary elections

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களைக்கட்டி உள்ளது. இதனையொட்டி பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளது. அதில் மேற்கு வங்க மாநிலம் பாசிர்ஹட் நாடாளுமன்ற  தொகுதி வேட்பாளராக ரேகா பத்ரா அறிவிக்கப்பட்டது, தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பட்டியலின பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான (தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்) ஷாஜகான் ஷேக் பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவர்களின் நிலத்தை அபகரித்துத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவங்களை எல்லாம் வெளியே கூறினால் கடுமையான பின் விளைவுகளை சந்திப்பீர்கள் என்று மிரட்டல் விடுத்துள்ளார் ஷாஜகான் ஷேக்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி கிராமத்து பெண்கள் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போலீஸில் புகார் அளித்துள்ள நிலையில், அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை.  இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டம் நடத்தினர். ஷாஜகான் ஷேக்கின் கூட்டாளிக்குச் சொந்தமான கோழிப்பண்ணைகளைப் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். இது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர் போராட்டத்திற்கு பிறகு ஷாஜகான் ஷேக் கடந்த மாத இறுதியில் கைது செய்யப்பட்டார்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற பாதிக்கப்பட்ட பெண்ணான ரேகா பத்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ரேகாவுக்கு பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் பாசிர்ஹட் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சந்தேஷ்காளி கிராமமும் இந்த தொகுதியில்தான் உள்ளது.

பாசிர்ஹட் நாடாளுமன்ற தொகுதியில் ரேகா பத்ராவுக்கு பாஜக சார்பில் வாய்ப்பு கொடுக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. அவருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதே சமயம் ரேகாவுக்கு சந்தேஷ்காளி மக்கள் முழு ஆதரவு கொடுத்துள்ளனர். கடந்த 6 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சந்தேஷ்காலி கிராமத்தை சேர்ந்த பெண்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் ரேகா பத்ராவும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் ரேகா பத்ராவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில்  ஆளும் கட்சிக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணை வேட்பாளராக பாஜக களமிறக்கியுள்ளது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேற்கு வங்கத்தில் புதிய டி.ஜி.பி. நியமனம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
New DGP in West Bengal Appointment

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) பிற்பகல் நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், ‘சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. மாலை, இரவு நேரங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் படங்கள் அகற்றப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது.

அந்த வகையில் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு, முதன்முறையாகத் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தது. அதில், மேற்கு வங்க மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக பொறுப்பு வகித்து வந்த ராஜீவ் குமாரை நீக்கி தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்து மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி கூறுகையில், “ராஜீவ் குமார் (டி.ஜி.பி.) ஆட்சியில் இருக்கும் கட்சியின் (திரிணாமுல் காங்கிரஸ்) குறிப்பாக அரசின் முகமாக இருந்தார். அரசின் உத்தரவின்றி அவர் பணிபுரிய மாட்டார் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள, டி.ஜி.பி.யாக இருந்தும் மக்களின் குறைகளை கேட்காததால், பல புகார்களை பதிவு செய்துள்ளோம். இது நல்ல முடிவு. இது எங்களுக்கு மகிழ்ச்சி” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரியான விவேக் சஹாய் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநில உள்துறை செயலாளர்களையும் மாற்ற உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.