
புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காமராஜ் நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார் அவரது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அதற்கான கடிதத்தை வழங்கியுள்ளார்.
ஏற்கனவே புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், அம்மாநில அமைச்சருமான நமச்சிவாயம் (வில்லியனூர் தொகுதி), தீப்பாய்ந்தான் (ஊசுடு தொகுதி) ஆகிய இருவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கான கடிதத்தை அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் கடந்த மாதம் 25-ஆம் தேதி வழங்கினர். இதில் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார்.
புதுச்சேரியில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளது அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 4 பேர் இதுவரை ராஜினாமா செய்துள்ளது புதுச்சேரி மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.