Skip to main content

“பிரதமர் மோடியைப் பின்பற்றி ரிவாபா அரசியலுக்கு வந்திருக்கிறார்” - மனைவிக்காக பிரச்சாரம் செய்யும் ஜடேஜா

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

Jadeja campaigning for his wife in Gujarat elections

 

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 182 தொகுதிகள் கொண்ட குஜராத்தில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள பாஜக, 6-வது முறையாகவும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றத் தீவிரப் பிரச்சாரம் மற்றும் பல யுக்திகளைக் கையாண்டு வருகிறது. மறுமுனையில், இழந்த தங்களது கௌரவத்தை மீட்டெடுக்க காங்கிரஸ் போராடிக் கொண்டிருக்கிறது.

 

முன்னெப்போதும் இல்லாத வகையில், ஆம் ஆத்மியின் வருகையால் இருமுனைப் போட்டியாக இருந்த குஜராத் தேர்தல் தற்போது மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. இதனிடையே 166 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இரண்டு கட்டங்களாக பாஜக வெளியிட்டுள்ள நிலையில் ஜாம்நகர் தொகுதியில் பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா போட்டியிடவுள்ளார். 

 

இந்நிலையில், மனைவிக்காக பிரச்சாரப் பணிகளில் இறங்கியுள்ள கிரிக்கெட் வீரர் ஜடேஜா செய்தியாளர்களிடம் பேசியதாவது, “குஜராத்தில் பேரவைத் தேர்தல் டி20 கிரிக்கெட் போட்டி போல் உள்ளது. பாஜக வேட்பாளராக என் மனைவி அரசியலில் நுழைகிறார். ஜாம்நகர் மக்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு அளிக்க திரளாக வருமாறு கேட்டுக் கொள்கிறேன். என் மனைவி ரிவாபா பிரதமர் மோடியின் வழியைப் பின்பற்றி அரசியலுக்கு வந்திருக்கிறார். மேலும், அவரது கொள்கைகளைப் பின்பற்றி மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறார். அவருக்கு எப்போதுமே பிறருக்கு உதவும் குணம் அதிகம். முதல்முறையாக அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். இதன்மூலம் அவர் அதிகம் கற்றுக்கொள்வார். அதனால் உங்கள் ஆதரவு அவருக்கு எப்போதும் தேவை” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.